உ.பி.: மாயாவதியும் அகிலேஷும் மீண்டும் கை கோர்த்தால்தான் வெல்ல முடியும்... இடைத்தேர்தல் தரும் பாடம்!
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. அதேநேரத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி கனி கிடைக்கும் என்கிற பாடத்தையும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக மொத்தம் 7 இடங்களைக் கைப்பற்றியது.
இருப்பினும் கடந்த 2017 தேர்தலில் வென்ற ஜைதாபூர் தொகுதியை இம்முறை சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக இழந்துள்ளது. இத்தேர்தல் முடிவுகள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
ஹரியானா முதல்வர் கட்டாரின் அமைச்சரவையில் ஒருவரை தவிர அனைத்து அமைச்சர்களும் படு தோல்வி!
சமாஜ்வாதிக்கு ஏறுமுகம்
தேர்தலை எதிர்கொண்ட 11 தொகுதிகளில் 2017-ல் சமாஜ்வாதி வென்றது ஒரே ஒரு தொகுதிதான். தற்போது ஜைதாபூர் தொகுதியை பாஜகவிடம் இருந்தும் ஜலால்பூர் தொகுதியை பகுஜன் சமாஜ் கட்சியிடம் இருந்தும் சமாஜ்வாதி கைப்பற்றியுள்ளது.
காங்கிரஸ் திடீர் உற்சாகம்
இந்த மாநிலத்தை பல ஆண்டுகாலம் ஆண்ட காங்கிரஸுக்கு கங்கோ தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது ஆறுதலான செய்திகள் வந்து கொண்டிருந்தன. நேற்று காலை முதல் பல மணிநேரம் காங்கிரஸ் வேட்பாளர்தான் முன்னிலையில் இருந்தார்.
பாஜகவிடம் வீழ்ந்த காங்கிரஸ்
ஆனால் கடைசி சுற்றுகளில் பாஜகவுக்கு ஆதரவாக நிலைமை மாறிப் போனது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அத்தொகுதியை பாஜக கைப்பற்றியது.
படிப்பினைகள் கொடுத்த தேர்தல்
உத்தரப்பிரதேசத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பல படிப்பினைகளை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம். லோக்சபா தேர்தலின் போது நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்தது.
கூட்டணி இருந்திருந்தால்..
இந்த கூட்டணியால் லோக்சபா தேர்தலில் வெல்ல முடியாமல் போனாலும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமான கூட்டணியாக அது அமைந்தது. தற்போதைய இடைத்தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி நீடித்திருந்தால் இடைத்தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாகவே இருந்திருக்கும் என்கின்றன வாக்கு எண்ணிக்கை முடிவுகள்.
சில தொகுதி நிலவரங்கள்
சில தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரங்களை பார்த்தாலே இந்த களநிலவரம் புரிந்துவிடும்.
கங்கோ தொகுதி:
காங்கிரஸ்- 62,881 ; சமாஜ்வாதி- 57,374; பகுஜன் சமாஜ் கட்சி- 32,276
பாஜக- 68,300
லக்னோ கண்ட்டோமெண்ட்
பகுஜன் சமாஜ்- 10, 709; சமாஜ்வாதி- 21,256; காங்கிரஸ்- 19,445
பாஜக- 56,684
கோவிந்த் நகர்
காங்கிரஸ்- 38,993; பகுஜன் சமாஜ்- 5434; சமாஜ்வாதி- 11,915
பாஜக- 60,237
மாணிக்பூர்
பகுஜன் சமாஜ்- 38,296 ; சமாஜ்வாதி- 53,470; காங்கிரஸ்- 8233
பாஜக 66.310
பால்கா:
பகுஜன் சமாஜ்- 31,640; சமாஜ்வாதி 43, 154; காங்கிரஸ்- 1353
பாஜக- 89,641
அதாவது உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிப் போனதால் மிக எளிதாக பாஜகவால் வெற்றியை அறுவடை செய்ய முடிந்திருக்கிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்த இடைத்தேர்தல் முடிவுகள்.