2ஜி புகழ் 'நீரா ராடியா' மருத்துவமனையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத்- உ.பி.யில் சர்ச்சை
லக்னோ: 2ஜி ஊழல் வழக்கில் பெரிதும் பேசப்பட்ட லாபியிஸ்ட் நீரா ராடியாவுக்கு சொந்தமான நடமாடும் மருத்துவமனையை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனையடுத்து இது தொடர்பான புகைப்படங்கள் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
2ஜி ஊழல் வழக்கில் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலருடனும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகின.
தமிழகத்தைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் குறித்த நீரா ராடியாவின் உரையாடல்கள் முக்கியமானவையாக பார்க்கப்பட்டன. நீரா ராடியாவின் சுமார் 5,000 தொலைபேசி உரையாடல்கள் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
2016-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் 351 படுக்கைகளைக் கொண்ட பிரமாண்ட மருத்துவமனையை தொடங்கினார் நீரா ராடியா. இந்நிலையில்தான் வாரணாசியில் நீரா ராடியாவின் நடமாடும் மருத்துவமனையை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்திருக்கிறார்.
நீரா ராடியாவுக்கு சொந்தமான நயாதி ஹெல்த்கேரின் நடமாடும் மருத்துவமனையை தொடங்கி வைத்த புகைப்படங்கள் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டன. பின்னர் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையாக வெடித்த உடன் இந்த படங்கள் நீக்கப்பட்டன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஹீரோபாஜ்பாய், நீரா ராடியா எந்த ஒரு வழக்கிலும் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல. அவருடன் புகைப்படத்தில் இருப்பது ஒன்றும் தவறும் அல்ல என்றார்.
அதேநேரத்தில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத், சில நேரங்களில் யோகி ஆதித்யநாத் பலாத்கார குற்றவாளி சின்மயானந்துடன் புகைப்படத்தில் இருக்கிறார். தற்போது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீரா ராடியாவுடன் புகைப்படத்தில் இருக்கிறார் யோகி ஆதித்யநாத். குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் யோகி ஆதித்யநாத் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் என சாடியுள்ளார்.