சாவறதுக்குன்னே வந்தா உயிரோடு இருப்பாங்களா? சி.ஏ.ஏ.போராட்டம் குறித்து உ.பி. முதல்வர் சர்ச்சை பேச்சு
லக்னோ: சாக வேண்டும் என்பதற்காகவே சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்துக்கு வருகிறவர்கள் உயிருடனா இருக்க முடியும்? என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் 2 மாதங்களாக போராட்டங்கள் நீடித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் மட்டும் 22 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆனால் உத்தரப்பிரதேச மாநில அரசு, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் யாரும் பலியாகவில்லை என மறுத்து வருகிறது. அதேநேரத்தில் பிஜ்னோர் போலீசார், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்தான் ஒருவர் இறந்தார் என கூறியிருந்தனர்.
அம்மாநில சட்டசபையில் இன்று சமாஜ்வாதி கட்சியினர் இப்பிரச்சனையை எழுப்பினர். சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது துப்பாக்கிச் சூடுகளில் பலியானோர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியினர் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசார் பாராட்டுக்குரியவர்கள். ஒருவர் சாக வேண்டும் என்று சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்துக்கு வரும்போது உயிருடனான இருக்க முடியும்? அப்பாவி பொதுமக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவர் வருகிறார்.
அவரை போலீசார் தடுக்கின்றனர். இப்போராட்டத்தில் கொல்ல வந்த நபர் அல்லது போலீஸ்காரர் உயிரிழக்க நேரிடும். சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் யாரும் பலியாகவே இல்லை. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது என்றார்.