பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி கிளிக்கிய பெண் போலீசார்..! கடுமையான ஆக்சன் எடுக்கும் யோகி அரசு
லக்னோ: நேற்று உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று லக்னோ காவல்துறை ஆணையர் டிகே தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் அருண் வால்மிகி என்ற தலித் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்த சம்பவம் முதல்வர் ஆதித்யநாத் அரசுக்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. லக்கிம்பூர் விவசாய படுகொலை பாதிப்பே இன்னும் அடங்காத நிலையில் இந்த மரணம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
அருண் வால்மிகி என்ற அந்த இளைஞர் ஆக்ரா அருகே இருக்கும் ஜகதீஸ்புரா காவல்நிலையத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை திருடியதாக புகார் வைக்கப்பட்டது. தூய்மை பணியாளரான இவர் கடந்த சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு சொந்தமான பாதுகாப்பு அறையை சுத்தம் செய்யும் போது அங்கு இருந்து பணத்தை திருடியதாக புகாரில் கூறப்பட்டது.
கைது
இந்த நிலையில்தான் கைது செய்யப்பட்ட அருண் வால்மிகி காவல்நிலையத்தில் போலீசார் மூலம் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் வால்மிகி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உடலில் மோசமான காயங்கள் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை உலுக்கி உள்ளது.
உத்தர பிரதேசம்
இந்த நிலையில் ஜகதீஸ்புரா பகுதியில் அருண் வால்மிகி மரணத்திற்கு நீதி வேண்டி அவரின் உறவினர்கள், ஊர் மக்கள் போராடி வருகிறார்கள். நேற்று அருண் வால்மிகியின் உறவினர்களை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் ஆக்ரா அருகே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
கைது
ஆக்ராவில் போலீசாரிடம் பிரியங்கா காந்தி கடுமையான வாக்கு வாதம் செய்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்திய போது அங்கு இருந்த பெண் போலீசார் பிரியங்கா காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பிரியங்கா காந்தி அருகில் நின்ற சில பெண் போலீஸ் அதிகாரிகள் சிரித்தபடி போட்டோ எடுத்துக்கொண்டனர். பிரியங்கா காந்தியும் இந்த செல்பியில் மலர்ந்து முகத்துடன் காணப்பட்டார். இந்த போட்டோ வைரலானது.
செல்பி
இந்த நிலையில்தான் பிரியங்கா காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று லக்னோ காவல்துறை ஆணையர் டிகே தாக்கூர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு எதிராக முதல் கட்ட விசாரணையை தொடங்க வேண்டும் என்று துணை ஆணையருக்கு ஆணையர் டிகே தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அந்த பெண் போலீசாரின் செயல், துறை ரீதியான நடவடிக்கைக்கு ஏற்றதா. விதி மீறலா என்று விசாரித்து ரிப்போர்ட் அளிக்கும்படி காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த பெண் போலீஸ் அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரியங்கா ட்வீட்
இது தொடர்பாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ள கருத்தில் , என்னுடைய அந்த போட்டோ ஆதித்யநாத்திற்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது என்று நினைக்கிறன். அதனால்தான் அந்த பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். போட்டோ எடுப்பது குற்றம் என்றால், என்னையும் அதற்காக நீங்கள் தண்டிக்க வேண்டும். மாறாக நேர்மையான பெண் போலீஸ் அதிகாரிகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது, என்று பிரியங்கா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.