உ.பி போலீசை கொன்ற பசுக்காவல் படை.. வீடியோ வெளியிட்டு மாட்டிக் கொண்ட கொலையாளி
உத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை கொன்றதாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறான்.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை கொன்றதாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறான்.
இரண்டு நாட்களுக்கு முன் உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் பசுக்காவலர்கள் அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பசுக்களை கொன்றுவிட்டதாக கூறி பெரிய கலவரம் செய்தனர். பசுக்காவலர்கள் நடத்திய இந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பசுக்காவலர்களால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்தும், தலைமறைவான பசுக்காவலர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடியோ வெளியிட்டான்
இந்த கொலையில் முதல் குற்றவாளி யோகேஷ் ராஜ் என்ற பசுக்காவல் படையை சேர்ந்த இளைஞன்தான். இவன் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவன். இவனை போலீசார் தேடி வருகிறார்கள். இவன் தற்போது, நான் எந்த கொலையும் செய்யவில்லை, கலவரத்தின் போது நான் சம்பவ இடத்தில் இல்லை. நான் போலீஸ் நிலையத்தில்தான் இருந்தேன் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறான். அதேபோல் இஸ்லாமியர்கள் பசுக்களை கொன்றதை நான் பார்க்கவில்லை என்றும் பல்டி அடித்துள்ளான்.
வேறு மாதிரி
ஆனால் இவன் இந்த வீடியோவில் பேசி இருக்கும் எதுவும் ஏற்கனவே அவன் போலீஸ் நிலையத்தில் முதலில் கொடுத்த வாக்குமூலத்துடன் ஒத்துப் போகவில்லை. போலீஸ் நிலையத்தில் அவன் கொடுத்த வாக்குமூலத்தில், கலவரம் அன்று, இஸ்லாமியர்கள் அங்கு பொதுவில் நின்று பசுக்களை கொன்று குவித்ததாக கூறியுள்ளார். அதேபோல் அதை தன்னுடைய கண்ணால் பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் புதிய வீடியோவில் அதற்கு எதிர் மாறாக ஊர்க்காரர்கள் வந்து பசுக்கொலை குறித்து புகார் அளித்ததாகவும், தான் எதையும் நேரில் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இன்னொரு திருத்தம்
அதேபோல் கலவரம் நடந்த போது, அந்த இடத்தில் நான் இல்லை. அப்போது நான் போலீஸ் நிலையத்தில் இருந்தேன் என்று புதிய வீடியோவில் கூறியுள்ளார். ஆனால் யோகேஷ் இரண்டு நிமிடம் மட்டும் போலீஸ் நிலையத்தில் இருந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெளிவாகி உள்ளது. அதேபோல் கலவரத்தை தூண்டும் வகையில் இவன் பொதுவில் இந்துத்துவா அமைப்பினரிடம் பேசியதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.
மொத்தமாக மாட்டிக் கொண்டான்
இப்படி இரண்டு வீடியோக்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருப்பதால் இவன் பொய் சொல்கிறான் என்பதை எளிதாக போலீசாரும் மக்களும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் கொலையாளி கைது செய்யப்படவில்லை என்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.