ராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு... உ.பி. துணை முதல்வர் 30 மாத சம்பளம் நன்கொடை!
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா தனது 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார்.
தான் முதலில் ராமரின் பக்தன், பின்னர்தான் மாநில துணை முதல்வர் என்று அவர் கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் என பிரமாண்ட முறையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.
ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். இதுவரை பல ஆயிரம் கணக்கில் நிதி சேர்ந்துளளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, ராமர் கோயில் கட்டுவதற்காக தனது 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்த தொகையை அவர் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் சுவாமி வாசுதேவநந்த் சரஸ்வதி ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் கூறிய கேசவ் பிரசாத் மௌரியா, 'நான் முதலில் ராமரின் பக்தன், பின்னர்தான் மாநில துணை முதல்வர். ராமர் கோயிலுக்காக ஐந்து தலைமுறையினர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளதால், இதனை கட்டுவதற்கு முழு தேசத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்தார்.