உத்தரபிரதேசத்தில் தெருநாய்கள் அட்டகாசம் - 3 மாத குழந்தையை கடித்துக் குதறி கொன்றன
உத்தரபிரதேச மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மூன்று மாத குழந்தையை கடித்துக்குதறி தலையை துண்டாக எடுத்துள்ள சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் வெறிநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏராளமான சிறுவர்கள் நாய் கடித்து இறந்துள்ளனர். சகாரான்பூர் மாவட்டத்தில் உள்ள தயால்பூர் கிராமத்தில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று மாத குழந்தையை தூக்கிக்கொண்டு போன தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் குழந்தையின் தலையில்லாத முண்டம் மட்டுமே கிடந்தது பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுராவில் மூன்று வயது சிறுவன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது கூட்டமாக வந்த நாய்கள் கடிர்து குதறின. பெற்றோர்களும் அக்கம் பக்கத்தினரும் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தாபூர் மாவட்டத்திலும் பக்கத்து மாவட்டங்களிலும் தெருநாய்கள் கடித்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில், அதிலும் தற்போது முதன்மையாக சித்தாபூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் அதிகம் உள்ளது. ராம்பூரில் தெரு நாய்கள் வெறிகொண்டு தாக்கியதில் ஒரே நாளில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு டஜன்கணக்கில் நாய்கள் சுற்றித்திரிகின்றன.
அந்த நாய்கள் வெறிகொண்டு கடித்து பலரின் உயிரை குடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சித்தாபூரில் நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர். இதனால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்பாமல் பெற்றோர்கள் பத்திரமாக வீட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கின்றனர். நாய்களின் அட்டகாசத்தை ஒடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டு.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் வெறிநாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலையில் ஏராளமான நாய்கள் தலையில்லாத மூன்று மாத பிஞ்சுக்குழந்தையை வாயில் கவ்விக்கொண்டு வந்ததைப் பார்த்த கிராம மக்கள் பதற்றமடைந்தனர். நாய்களின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய்கள் அட்டாகத்தை அடக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.