உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் பதவியேற்பு- அகிலேஷ் கடும் விமர்சனம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை திடீரென விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜிதன் பிரசாதா உட்பட 7 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் முனைப்புடன் உள்ளது.
மத்திய அமைச்சர்கள் பலர் உ.பி. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உ.பி.யில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்திகளை பட்டியலிட்டு அவற்றை சரி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'கேரளா மாப்ளா கலவரம் இந்துக்கள் மீதான திட்டமிட்ட படுகொலை'.. யோகி ஆதித்யநாத் சொல்கிறார்!
உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்
இதன் ஒருபகுதியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை திடீரென நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜிதின் பிரசாதா உட்பட 7 பேர் நேற்று புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஜாதிய அடிப்படையில்..
ஜாதிகளுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களாகப் பதவியேற்ற கங்வார், பிரஜாதிபதி, சங்கீதா பல்வந்த் பிந்த் ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதிக், பல்துராம் ஆகியோர் தலித்துகள். சஞ்சய் சிங், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.
மொத்தம் 60 பேர் அமைச்சர்கள்
புதிய அமைச்சர்களுடன் சேர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மொத்தம் 60 பேர் இடம்பெற்றுள்ளனர். உ.பியில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் 15% பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம். உ.பி. சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 403. இதனிடையே அமைச்சரவை திடீர் விரிவாக்கத்தை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அகிலேஷ் விமர்சனம்
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், என்னதான் அமைச்சரவையை விரிவுபடுத்தினாலும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு அது கை கொடுக்காது. இது அப்பட்டமான ஒரு நாடகமே. ஆகையால் உ.பி.யில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றார். 2017-ல் நடைபெற்ற உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக 312 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான அப்னா தள் 9 இடங்களில் வென்றது. மற்றொரு கூட்டணி கட்சியான எஸ்.பி.எஸ்.பி 4 இடங்களில் வென்றது. ஆனால் 2019-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியது.