டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு!
லக்னோ: குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர்கள் பேரணியில் உத்தரபிரதேசத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஜாட் சமூக அமைப்பு சார்பில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் 84 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண் சட்டத்தை கண்டித்து குடியரசு தினம் அன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் கொண்டு பிரமாண்ட பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்தது.
அதிரடி உத்தரவு
3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
டிராக்டர்கள் பேரணி
குடியரசு தினம் அன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் கொண்டு பிரமாண்ட பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு வந்து பேரணியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கடும் கோபத்தில் உள்ள உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி குடியரசு தின பேரணியில் பங்கேற்க தற்போதே தயாராகி வருகின்றனர்.
உத்தரபிரதேச விவசாயிகள்
மேற்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிசாலி பகுதியில் முசாபர்பூர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களின் 84 கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாட் சமூக அமைப்பு சார்பில் பஞ்சாயத்து கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் மாநிலத்தில் இருந்து பெருவாரியான விவசாயிகள் டிராக்டர் பேரணியில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.
மாவட்டடம் வாரியாக டிராக்டர்கள்
ஷாம்லிக்கு அருகிலுள்ள பனாட் மாவட்டத்தில் இருந்து மட்டும் 1,000-1,200 டிராக்டர்கள் செல்லும் எனவும் ஒவ்வொன்றிலும் 25 பேர் செல்வார்கள் என்றும் அங்குள்ள ஜாட் சமூக தலைவர் கூறினார். பாக்பத் மாவட்டத்தில் உள்ள 84 கிராமங்களைச் சேர்ந்த தலைவரான சஞ்சீவ் சவுத்ரி என்பவர் தனது மாவட்டத்திலிருந்து 2,000-2,200 டிராக்டர்கள் செல்லும் என கூறியுள்ளார். முன்னதாக குடியரசு தின ஒத்திகையாக அங்கு விவசாயிகள் 1500 டிராக்டர்களுடன் பேரணி ஒத்திகை செய்து பார்த்தனர்.