இதென்னப்பா புதுக்கதையா இருக்கு.. சரக்கு போட்டா தான் ‘ உருளை’ நல்லா வளருமாம்!
மது தெளித்தால் உருளை நன்கு வளரும் என்ற வதந்தி உத்தரப் பிரதேசத்தில் பரவியுள்ளது.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மதுபானம் தெளித்தால் உருளைக்கிழக்கு செழிப்பாக வளரும் என பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகஅளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. குளிர் சீசனான தற்போது பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.
வழக்கமாக உருளைக்கிழக்கு நோய்ப் பாதிப்பிற்கு அதிக எடையுடன் வளர சில குறிப்பிட்ட மருந்துகள் தெளிக்கப்படுவது வழக்கம்.
பரவிய வதந்தி:
இந்நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் வதந்தி ஒன்று பரவியது. அதாவது, உருளைக்கிழங்கு செடிக்கு மதுபானத்தை மருந்தாகத் தெளித்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என விஷமிகள் சிலர் வதந்தியைப் பரப்பினர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்:
இதனை உண்மையென்று நம்பிய விவசாயிகள், மதுபானத்தை உரமாக உருளைக்கிழங்கிற்கு தெளித்து வருகின்றனர். ஆனால் இப்படி செடிக்கு மதுபானம் தெளிப்பதால், விளைச்சலில் மாற்றம் இருக்காது என்பது தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் கருத்து.
இது தான் காரணம்:
இது குறித்து அவர்கள் கூறுகையில் ‘‘விவசாயிகளை திசை திருப்பும் வகையில் சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வதந்தியை பரப்பியுள்ளனர். இதற்கு அறிவியல் ரீதியான எந்த ஆதாரமும் இல்லை. உருளைக்கிழங்கு செடிக்கு உரிய உரம் இட வேண்டும். விவசாயிகள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.
மது விற்பனை அதிகரிப்பு:
இது ஒருபுறம் இருக்க, விவசாயிகள் அதிக அளவில் உரத்திற்காக மதுபாட்டில்கள் வாங்குவதால், அப்பகுதியில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உருளை நன்கு வளர்கிறதோ இல்லையோ, மது விற்பனை நன்றாக வளர்ந்து வருகிறது என்கின்றனர் அப்பகுதி அதிகாரிகள்.