உபி. சிறுமி கொலையில் வெளியாகும் திடுக் தகவல்கள்.. கொலையாளி அஸ்லாமின் அதிர வைக்கும் பின்னணி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொலையாளிகளில் ஒருவரான அஸ்லாமின் பின்னணி அதிர வைக்கும் வகையில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் டாப்பல் நகரைச் சேர்ந்த பெற்றோர் அப்பகுதியை சேர்ந்த ஜாகீத் மற்றும் அஸ்லாமிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்றனர். ஆனால் அந்த கடனை அவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜாகீத்தும் அஸ்லாமும் அந்த பெற்றோரின் 2 வயது மகளை கடந்த 31ஆம் தேதி கடத்தி சென்றுள்ளனர். குழந்தையை காணாத பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
உத்தரப்பிரதேச சிறுமி கொடூர கொலை.. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை!
குப்பையில் கிடந்த மூட்டை
போலீசார் குழந்தை மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஜூன் இரண்டாம் தேதி சிறுமியின் வீட்டின் அருகே குப்பையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு மூட்டை கிடந்தது.
முற்றிலும் சிதைக்கப்பட்ட உடல்
அந்த மூட்டையை பிரித்து பார்த்ததில் அதில் சிறுமி கொலை செய்யப்பட்டு முகம் மற்றும் உடல் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதுதொடர்பாக ஜாகீத்தையும் அஸ்லாமையும் போலீசார் கைது செய்தனர். குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், உடல் கொடூரமாக சிதைக்கப்பட்டிருப்பதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அழுகியதால் குப்பையில் வீச்சு
குழந்தையை கொன்று மூன்று நாட்கள் அஸ்லாமும் ஜாகீத்தும் உடலை வீட்டிலேயை மறைத்து வைத்துள்ளனர். கொளுத்தும் வெயிலால் உடல் அழுக தொடங்கியதும் உடலை மூட்டையாக கட்டி குப்பையில் வீசியுள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகளை பலாத்காரம் செய்த அஸ்லாம்
இந்நிலையில் அஸ்லாம் கடந்த 2014ஆம் ஆண்டு தனது 4 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக டாப்பல் நகர் போலீஸ் ஸ்டேஷனில் அஸ்லாம் மீது வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தை பலாத்காரம்?
சொந்த மகளையே அஸ்லாம் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படவில்லை.