உத்தரப்பிரதேச சிறுமி கொடூர கொலை.. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை!
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெற்றோர் வாங்கிய கடனுக்காக இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள டாப்பல் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி, அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீத் மற்றும் அஸ்லாம் ஆகியோரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கடனாக பெற்றுள்ளனர்.
இந்த பணத்தை திருப்பிக்கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் பெற்ற தம்பதிக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பெண் குழந்தை கடத்தல்
இதனால் ஆத்திரமடைந்த ஜாகீத்தும் அஸ்லாமும் அந்த தம்பதியின் 2 வயது பெண்குழந்தையை கடந்த 31ஆம் தேதி கடத்திச்சென்றனர். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.
மூட்டையில் கிடந்த குழந்தை
இதையடுத்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். குழந்தை மாயமான மூன்றாவது நாள் அவரது வீட்டின் அருகே குப்பையில் கிடந்த மூட்டையில் சிறுமி சடலமாக கிடந்தார்.
சிதைக்கப்பட்ட உடல்
அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சி
சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாகவும் அவரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை?
இந்நிலையில் சிறுமியின் கொலை குறித்து பல போலியான தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதாவது, சிறுமியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதாகவும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் மேலும் சிறுமியின் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
வன்கொடுமை செய்யப்படவில்லை
ஆனால் இதனை மறுத்துள்ள போலீசார், சிறுமி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் சிதைக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை - எச்சரிக்கை
சிறுமியின் கண்கள் தோண்டப்படவில்லை என்றும் அவர் மீது ஆசிட் ஊற்றப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்ட வேண்டாம் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலீசார் குவிப்பு
இதனிடையே அலிகார் மாவட்டம் டாப்பல் கிராமத்தில் இந்த சம்பவத்தால் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.