கல்லூரி சுவர் தரமில்லாமல் விழுந்ததாக வீடியோ எடுத்த எம்எல்ஏ மீது வழக்கு பதிவு: உ.பி. போலீஸ் நடவடிக்கை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரியில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஆய்வுக்காக கட்டட சுவரை மெல்ல தள்ளினார். இதில் அந்த சுவர் விழுந்தது. இந்நிலையில் சுவரை இடித்து தள்ளியதாக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி
பாஜக ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதில் சமாஜ்வாதி கட்சி ஆர்வம் காட்டி வருகிறது.
ஆய்வு செய்த சமாஜ்வாதி எம்எல்ஏ
இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள சிவசத் கிராமத்தில் அரசு சார்பில் புதிதாக பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ராணிகாஞ்ச் தொகுதி எம்எல்ஏவான சமாஜ்வாதி கட்சியின் ஆர்கே வர்மா கல்லூரி கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.
விழுந்த கல்லூரி சுவர்
அப்போது கட்டப்பட்டுள்ள சுவரின் வலிமையை அவர் சோதிக்க முடிவு செய்தார். இதற்காக கைகளால் சுவரை மெல்ல தள்ளினார். அப்போது அந்த சுவர் அப்படியே சரிந்து விழுந்தது. சிமெண்ட் பயன்படுத்தாமல் கட்டியதால் தான் சுவர் விழுந்ததாக அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்டுமான பொருட்களின் மாதிரி பரிசோதிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
விமர்சனம்
இதற்கிடையே ஆய்வின்போது சுவர் விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டிய கல்லூரியின் கட்டுமானம் இப்படி தரமற்றதாக உள்ளதே? எனக்கூறி நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். மேலும் பாஜக ஆட்சி தரமான முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார். "பாஜக ஆட்சியில், ஊழல் ஆச்சரியமாக இருக்கிறது. பொறியியல் கல்லூரி கட்டுமானத்தில் சிமெண்ட் இல்லாமல் செங்கற்கள் வைத்து கட்டப்பட்டுள்ளன'' என விமர்சனம் செய்தார்.
எம்எல்ஏ மீது வழக்கு
இந்நிலையில் தான் கல்லூரி கட்டடத்தின் சுவரை இடித்ததாக எம்எல்ஏ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கந்தாய் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவான டாக்டர் ஆர்கே வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுபற்றி பிரதாப்கர் மாவட்ட எஸ்பி சத்பால் அண்டில் கூறுகையில், ‛‛அரசு பொறியியல் கல்லூரி கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் திட்ட மேலாளர் முகமது இர்ஷத் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் கட்டுமான பகுதியில் சுவரை இடிக்காமல் தடுக்க தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது'' என்றார்.
****