இடம்பெயர் தொழிலாளர்களுக்காக 800 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி கொடுத்த உ.பி அரசு!
லக்னோ: நாடு முழுவதும் இடம்பெயர்ந்துள்ள தங்களது மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக 800 சிறப்பு ரயில்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு அனுமதி அளித்திருக்கிறதாம். ஆனால் மேற்கு வங்க மாநிலமோ வெறும் 19 சிறப்பு ரயில்களுக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மே 31-ந் தேதி வரை 4-ம் கட்ட லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் முந்தைய லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் லாக்டவுனால் பிற மாநிலங்களில் தவித்த இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் திரும்பி வருகின்றனர்.
மக்களிடம் யாசகம் பெற்று ரூ10,000 கொரோனா நிதி உதவி கொடுத்த முதியவர் பூல்பாண்டியன்- குவியும் பாராட்டு
800 சிறப்பு ரயில்கள்
நாட்டில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த இடம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1-ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநில அரசு இதுவரை 800 சிறப்பு ரயில்களை தங்களது மாநிலத்துக்குள் நுழைவதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறது.
19 ரயில்கள்தானாம்
அதேநேரத்தில் பல மாநிலங்கள் கொரோனா அச்சத்தால் குறிப்பிட்ட அளவிலான ரயில்களுக்கு மட்டுமே அனுமதி அளித்திருக்கின்றன. இதனால்தான் இடம்பெயர் தொழிலாளர்கள் சாலை மார்க்கமாக நடந்து சென்று விபத்துகளில் சிக்கும் துயரங்கள் நிகழ்கின்றன. நாட்டிலேயே மிக குறைந்த அளவாக வெறும் 19 ரயில்களுக்கு மட்டுமே மேற்கு வங்க அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இத்தனைக்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வெளிமாநிலங்களில் தவித்து வருகின்றனர்.
தயங்கும் பீகார் அரசு
பீகார் மாநில அரசு 50 சிறப்பு ரயில்களை இதுவரை அனுமதித்துள்ளது. இத்தனைக்கும் பிற மாநிலங்களில் தத்தளிக்கும் பீகார் இடம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு குறைந்தபட்சம் 200 சிறப்பு ரயில்களையாவது பீகார் மாநில அரசு அனுமதித்திருக்க வேண்டும். தொடக்கம் முதலே பிற மாநிலங்களில் தத்தளிக்கும் தங்களது மாநில தொழிலாளர்களை மீட்டு வருவதில் பீகார் அரசு ஒருவித தயக்கத்தையே வெளிப்படுத்துகிறது.
ஒடிஷா ஆம்பன் புயல்
சத்தீஸ்கர் மாநிலமும் 19 ரயில்களுக்குத்தான் அனுமதி தந்திருக்கிறதாம். ராஜஸ்தான் மாநில அரசு 33 ரயில்களுக்கும் ஜார்க்கண்ட் மாநிலம் 72 சிறப்பு ரயில்களுக்கும் அனுமதி அளித்திருக்கிறது. ஒடிஷாவைப் பொறுத்தவரையில் ஆம்பன் புயலால் பல ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.