சி.ஏ.ஏ. போராட்டம்: 130 போராட்டக்காரர்களுக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு நோட்டீஸ்
லக்னோ: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுசொத்துகளை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உத்தரப்பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின் போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ, ராம்பூர், சம்பால், பிஜ்னோர் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. பொதுசொத்துகள் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொதுசொத்துகளை சேதப்படுத்தியோர் என கண்டறியப்பட்டோரிடம் நஷ்ட ஈடு கேட்கும் நடவடிக்கையை உத்தரப்பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
ராம்பூரில் 28 பேர், சம்பாலில் 26 பேர், பிஜ்னோரில் 43 பேர், கோரக்பூரில் 33 பேர் என மொத்தம் 130 பேருக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் வீடியோக்கள், போட்டோக்கள் அடிப்படையில் போராட்டக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பொதுசொத்துக்களை நாசப்படுத்தியோரின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இத்தகைய நோட்டீஸை பெற்ற பலரும் தாங்கள் போராட்டத்தில் பங்கேற்காத நிலையிலும் தங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது என கூறியுள்ளனர்.