டீசல் வழங்க தடை போட்ட உ.பி. அரசு... என்னவாகும் விவசாயிகளின் டெல்லி டிராக்டர் பேரணி?
லக்னோ: குடியரசு தினத்தன்று நடைபெறும் டிராக்டர் பேரணியை தடுக்கும் வகையில் டிராக்டர்களுக்கு டீசல் வழங்க உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை இருப்பதால் இச்சட்டங்கள் எளிதில் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் இச்சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
குடியரசு தின டிராக்டர் பேரணி
வரும் குடியரசு தினத்திற்குள் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தனர். இருப்பினும், மத்திய அரசுக்கு விவசாய சட்டங்களை திரும்பெறும் எண்ணம் இல்லை என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மத்திய அமைச்சர்கள் தெளிவுபடுத்தினர். இதையடுத்து குடியரசு தினத்தன்று மிகப் பெரிய டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் தாயாராகி வருகின்றனர்.
டீசல் வழங்க மறுப்பு
உத்தரப் பிரதேசம், பீகார், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டிராக்டர் பேரணியில் விவசாயிகள் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், டிராக்டர்களுக்கு டீசல் வழங்க வேண்டாம் என்று உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாக லைவ் இந்துஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் கண்டனம்
உத்தரப் பிரதேச அரசின் இந்த உத்தரவுக்கு விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், டீசல் வழங்க மறுத்தால் விவசாயிகள் தாங்கள் இருக்கும் நகரங்களிலேயே சாலை மறியலில் ஈடுபடுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மாநிலம் முழுவதுமே உத்தரப்பிரதேச அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பேரணிக்கு அனுமதியில்லை?
டிராக்டர் பேரணி தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் காவல் துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து பேரணிக்குக் காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இதை மறுத்துள்ள காவல் துறை, டிராக்டர் பேரணி குறித்து விவசாயிகள் எதையும் இதுவரை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றும் இதனால் டிராக்டர் பேரணிக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்