கொரோனாவை குணப்படுத்துகிறதா அரிப்பு மருந்து.. ஆச்சர்யப்படுத்தும் உபி.. தீவிரமாகும் சோதனை
லக்னோ: அரிப்பு மருந்தால் கொரோனா தொற்று குணமாகிறதா? இந்த கேள்வி உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் இதற்கு பதில் ஆம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட வேண்டாம். ஏனெனில் உத்தரப்பிரதேச அரசு கோவிட் மருத்துவமனைகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு பதில் அரிப்புக்கு தரப்பபடும் ஐவர்மெக்டின் மருந்தை தருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைய எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதையாக பல்வேறு பரிசோதனை முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநில அரசு வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.
இதுநாள் வரை கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க முன்கள வீரர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட சுகாதார பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆபத்தான கொரோனா நோயாளிகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தான் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆக்ராவில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் அரிப்புக்கு தரப்பபடும் ஐவர்மெக்டின் மருந்து கொரோனாவை குணப்படுத்த உதவியதாம் இதையடுத்து உத்தரப்பிரதேச அரசு ஐவர்மெக்டின் மருந்தை ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு பதில் தர உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்தை ஆஸ்திரேலியாவில் பரிசோதித்த போது முடிவுகள் நேர்மறையாக வந்தன என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். 48 மணி நேரத்திற்குள் ஐவர்மெக்டின் 5000 மடங்கு வேகமாக வைரஸைக் கொல்லும் திறன் இருந்ததாக கூறுகிறார்கள்.
மாதத்தில் மூன்று நாட்கள்
பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புழு எதிர்ப்பு மருந்துதான் ஐவர்மெக்டின் மருந்து, இந்த மருந்தின் ன் 12 எம்ஜி-யின் இரண்டு மாத்திரைகள் சந்தையில் 25 முதல் 30 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இந்த மருந்தின் இருப்பு இந்தியாவில் மிக அதிக அளவு இருப்பில் இருக்கிறது. இந்த மருந்தை மாதத்தில் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது
உத்தரப் பிரதேச சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், அமித் மோகன் பிரசாத், சி.எம்.ஓ டாக்டர் தீபக் ஒஹ்ரிக்கு, கொரோனா நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் மருந்தை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உளப்ட சுகாதார ஊழியர்களுக்கும் இந்த மருந்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வழங்கப்படுகிறது. எனினும் , இந்த மருந்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படாது என்றும் இது அவர்களுக்கு ஆபத்தானது என்று அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தின் அளவு எவ்வளவு
கொரோனா நோயாளிகளில் எல் -1, எல் -2 மற்றும் எல் -3 ஆகிய மூன்று பிரிவுகளின் நோயாளிகளுக்கும் மருந்து வழங்கப்படுகிறது. வைரஸின் அறிகுறிகள் இல்லாத கொரோனா (Corona) நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும் நபர்கள், இரவு உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு முதல் நாள் மற்றும் ஏழாம் நாள் ஐவர்மெக்ட்டின் எடுத்துக்கொள்ள வேண்டும். சுகாதார பணியாளர்கள் முதல் நாள், ஏழாம் நாள் மற்றும் மாதத்தின் கடைசி நாளில் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழியில், அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும் என உபி சுகாதாரத்துறை அறிவிதுள்ளது. இந்த மருந்துடன் நோயாளிகளுக்கு ஆன்டி-பயோடிக் டாக்ஸிசைக்ளின் 100 mg இரண்டு முறை தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் வழிகாட்டுதல்களை உபி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கை வைத்தியம் கூடாது
இந்த மருந்து குறித்த தகவல்கள் அனைத்தும் உபி அரசின் வழிகாட்டுதல் உத்தரவில் கூறப்பட்டவையாகும் பொதுமக்கள் சுயமாக எதையும் செய்ய வேண்டாம். மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. கைவைத்தியம் செய்வது உயிருக்கே ஆபத்தில் முடியவும் வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா விஷயத்தில் அரசின் வழிகாட்டுதல் படி முறையாக செயல்பட வேண்டும்.