ரோடு போடும் கூலி வேலை கிடைச்சாலும் பரவாயில்லை.. உ.பி. பட்டதாரிகளின் பரிதாப நிலை!
லக்னோ: 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை கிடைத்தால் கூட போதும்.. நாங்க பார்க்க தயாரா இருக்கிறோம் என்று கூற ஆரம்பித்துள்ளனர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள். அந்த அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக உள்ளதாம்.
லாக்டவுன் காரணமாக இந்தியாவில் பல கோடி பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பலர் வேலைகளை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த மாநிலத்தை விட்டு பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து பிழைக்கப் போன சாதாரண தொழிலாளர்கள் ஆவர்.
உ.பிக்கு மட்டும் கிட்டத்தட்ட 30 லட்சம் தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர். இவர்களுக்கு என்ன வேலை கொடுப்பது என்பது அந்த மாநில அரசுக்கு பெரும் சவாலாகியுள்ளது. இதனால் அவர்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 100 நாள் பணியில் அமர்த்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
எதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்!
வேலையில்லா திண்டாட்டம்
ஆனால் என்ன நிலைமை என்றால் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் மட்டும் வேலையில்லாமல் கஷ்டப்படவில்லை. ஏற்கனவே உ.பியைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களும் உரிய வேலை இல்லாமல் அல்லது இருந்த வேலையையும் இழந்து தெருவில் நிற்கின்றனராம். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டப்படுவோர் அங்கு எக்கச்சக்கமாக உள்ளனர்.
ஏதாவது வேலை கிடைச்சா போதும்
வேலையில்லாமல் கூலி வேலையாவது கிடைக்காதா என்று ஏங்குவோரில் பலரும் நன்கு படித்த பட்டதாரிகள் என்பதுதான் கொடுமையானது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ரோஷன் குமார். இவர் எம்ஏ படித்துள்ளார். வேலை இல்லை. இதனால் கூலி வேலையாவது கிடைத்தால் கூட போதும் என்று கம்மிய குரலில் அழாத குறையாக கூறுகிறார் ரோஷன் குமார். நான் ஒரு வேலை பார்த்து வந்தேன். என்னை திடீரென நிறுத்தி விட்டார்கள். இப்போது சாப்பிடக் கூட வழியில்லாத நிலையில் இருக்கிறேன் என்று கூறுகிறார் ரோஷன் குமார்.
ரோடு வேலைக்கும் தயார்
ரோஷன் குமார் போல அங்கு ஏகப்பட்ட பேர் வேலைகளை இழந்தும், வேலையில்லாமலும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்று செய்வது என்று தெரியாமலும் தவித்துக் கொண்டுள்ளனர். கிணறு வெட்டுவது, ஏரி குளங்களை சுத்தம் செய்வது என எந்த வேலை கிடைத்தாலும் செய்யத் தயார் என்று இவர்கள் கூறுகின்றனர். ரோடு போடும் வேலை என்றாலும் சரி கூப்பிடுங்க நாங்க ரெடி என்று கூறுகின்றனர்.
பிபிஏ பட்டதாரிக்கு நேர்ந்த கதி
இன்னொரு இளைஞர் பிபிஏ படித்துள்ளார். ரொம்ப நாளாக வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். ஒரு வழியாக மாதம் 7000 சம்பளத்துக்கு வேலை கிடைத்து போய்ச் சேர்ந்தார். ஆனால் லாக்டவுன் வந்து அவரது வேலையப் பறித்து விட்டது. இப்போது சொந்த கிராமத்துக்கு திரும்பி விட்டார். அவருக்கு கூலி வேலை போட்டுக் கொடுத்துள்ளாராம் அந்தக் கிராமத்து நாட்டாமை.. இருந்தாலும் மனம் கோணாமல் அதைச் செய்து வருகிறாராம் இந்த இளைஞர்.
விழி பிதுங்கும் அதிகாரிகள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த மாநிலத்துக்குத் திரும்பி வந்தவர்களுக்கு மட்டுமே இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஆனால் உள்ளூரிலேயே வேலையை இழந்த இளைஞர்களும் தற்போது இந்த வேலைக்கு அலை மோதுவதால் உ.பி. அதிகாரிகள் விழி பிதுங்கிப் போயுள்ளனராம். தற்போது மாநிலம் முழுவதும் 14 கோடி பேர் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அறிவித்தபடி 100 நாட்கள் வேலை கொடுத்தால் ரூ. 2.8 லட்சம் கோடி அரசுக்கு செலவீனம் ஏற்படுமாம்.