உ.பி.யில்.. கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஊழியர்... திடீர் மரணம்.. காரணம் வேறயாம்!
லக்னோ: கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்கள் என மொத்தம் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
உயிரிழப்பு
அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியிலுள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவருக்குக் கடந்த சனிக்கிழமை தடுப்பூசி அளிக்கப்பட்டது. 46 வயதாகும் அந்த மருத்துவமனை ஊழியர், தடுப்பூசி எடுத்துக்கொண்ட 24 மணி நேரத்தில் திடீரென்று உயிரிழந்ததாகத் தகவல் பரவியது. இத்தகவலை மொராதாபாத் தலைமை மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார்.
மாரடைப்பு
உயிரிழந்த மருத்துவமனை ஊழியர் மகிபால் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மகிபால் சிங் உயிரிழப்பு குறித்துப் பேசிய மொராதாபாத் தலைமை மருத்துவ அதிகாரி, "அவரது உடல் ஊடகூராய்வு செய்யப்பட்டது. அதில் மகிபால் சிங் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. அவரது உயிரிழப்பிற்கும் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்றார்.
பக்கவிளைவுகள்
இந்தியாவில் முதல் இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் 51 சுகாதார ஊழியர்களுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் சுமார் 447 பேருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றவர்களுக்குச் சாதாரண பக்க விளைவுகளே ஏற்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 13, 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.05 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1.52 லட்சத்தைத் தாண்டியுள்ளது.