மதம் என்று கூறி மக்களை பிரிக்கிறது.. பாஜகவில் இருந்து தலித் பெண் எம்.பி திடீர் விலகல்!
சமூகத்தை பிளவுப்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறி, அக்கட்சியில் இருந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்ரி பாய் புலே திடீரென விலகினார்.
லக்னோ: சமூகத்தை பிளவுப்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறி, அக்கட்சியில் இருந்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்ரி பாய் புலே திடீரென விலகினார்.
சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் சாவித்ரி பாய் புலே. கடந்த 2014ம் ஆண்டுபக்ராய்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக சாவித்ரி பாய் புலே தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாவித்ரி பேசுகையில், அனுமார் தலித் என்றும் அதனால் தான் அவர் அவமானங்களை சந்தித்ததாகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோல் தலித் வீட்டில் உணவு அருந்தும் பாஜகவின் திட்டத்தையும் வெளிப்படையாக விமர்சித்தார்.
முன்னதாக பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவை சிறந்த மனிதர் என்று போற்றி சர்ச்சையில் சிக்கினார் .
இந்நிலையில் சமூகத்தை பிளவுப்படுத்த முயல்வதாக திடீரென பாஜக மீது குற்றம்சாட்டியுள்ள சாவித்ரி, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தலித் எம்பியான் அவர் அம்பேத்காரின் நினைவு தினத்தில் கட்சியில் இருந்து விலகி உள்ளார். அதேநேரம் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.