லவ் ஜிகாத்.. ஆதாரம் இல்லை.. உ.பி இளைஞர் விடுதலை.. அரசு முகாமில் மனைவிக்கு கருச்சிதைவு!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் "லவ் ஜிஹாத்"துக்கு எதிரான மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணின் கணவர் ரஷித் ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ரஷித்தின் மனைவிக்கு அரசு முகாமில் போடப்பட்ட ஊசியால் கருச்சிதைவு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
உ.பி.யின் மொராதாபாத்தைச் சேர்ந்த ரஷீத் அலியும் , 22 வயது இந்துப் பெண் பிங்கியை ஐந்து மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தை வலதுசாரி இயக்கம் ஒன்று கண்டித்தது. அத்துடன் அந்த இயக்கத்தினர் அந்தப் பெண்ணையும், அவர் கணவர், கணவரின் சகோதரரையும் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
ரஷித் மற்றும அவரது அண்ணனை கைது செய்த காவல்துறை, அந்த இந்து பெண்ணை அரசு காப்பகத்துக்கு அனுப்பியது. ஆனால் அடுத்த சில நாளில் விடுதியில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக ஏழு வாரங்கள் கர்ப்பமாக இருந்த தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என்று தெரிவித்தார் '
நானாக மதம் மாறினேன்
மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜராகி பேசிய இளம் பெண், தன் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தன் கணவரை திருமணம் செய்துகொண்டேன்., என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றார். இதையடுத்து இளம் பெண்ணை, அவரின் கணவரின் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும், அவரின் கணவரும் கணவரின் சகோதரரும் தொடர்ந்து ஜெயிலிலேயே அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றம் உத்தரவு
ஆனால் அந்த பெண் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாததால், உத்தரபிரதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து நேற்ற ரஷீத் மற்றும் அவரது சகோதரர் 15 நாட்கள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மனைவி வேதனை
இதற்கிடையே கருச்சிதைவு ஆனது குறித்து பேசிய இளம் பெண், அரசு இல்லத்தில் எனக்கு வயிறு வலிக்குது என்று சொல்லிபோது, அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. எனக்கு தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்ட பின்னரே தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அல்ட்ராசவுண்ட்
அங்கு போடப்பட்ட ஊசிக்குப் பின்னரே தனக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது. முகாமில் சேர்ந்த இரண்டு நாள்கள் கழித்து எனக்கு அதிக ஊசி போட்டார்கள். என் உடல்நிலை மோசமாகி கருச்சிதைவு ஏற்பட்டது என்று கூறினார். அரசு இல்லத்திலும் மருத்துவமனை தரப்பிலும் இது குறித்த தெளிவான விளக்கங்கள் இல்லை. இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் நடந்த அல்ட்ராசவுண்ட் மருத்துவ பரிசோதனையில் பிங்கிக்கு கரு சிதைவு ஏற்பட்டது உறுதியாகி உள்ளது.
லவ் ஜிகாத்
திருமணத்துக்காக மட்டும் ஒருவர் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் `மதமாற்ற தடைச் சட்டம்' என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் உத்தரப்பிரதேசத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகிறர்கள் ஒரு மாதத்துக்குள், 8 வழக்குகள் இதன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.