உன்னாவ் பலாத்கார பெண் கார் விபத்து வழக்கு.. குற்றப்பத்திரிக்கையில் எம்எம்ஏ குல்தீப் சிங் பெயரே இல்லை
லக்னோ: உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அந்த பெண்ணின் உறவினர்கள் உயிரிழந்தனர். அந்த பெண் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் பெயர் சேர்க்கப்படவில்லை
உத்தர பிரதேச மாநில எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் அவரிடம் வேலை கேட்டு வந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை உத்தரப்பிரதேச போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் மற்றும் இரண்டு உறவுப் பெண்கள் உள்பட 4 பேர் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரைச் சந்திக்க கடந்தசில மாதங்களுக்கு முன்பு சென்றனர்.
அப்போது சாலையில் அவர்கள் சென்ற காரின் மீது லாரி ஒன்று பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் உடன் சென்ற இரு பெண்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் விபத்து அல்ல சதி என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டிதால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்றமே நேரடியாக இந்த வழக்கில் தலையிட்டது. வழக்கை சிபிஐயின் வசம் ஒப்படைத்தது. இதையடுத்து எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் உள்பட 10 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் இன்று சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் பெயர் சேர்க்கப்படவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.