பாஜகவிற்கு தாவும் முக்கிய தலை.. என்ன சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் இப்படி ஒரு பிரச்சனையா?
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி உருவாக காரணமாக இருந்த முக்கிய கட்சி ஒன்று தற்போது அந்த கூட்டணியில் இருந்தே விலக்கப்பட்டு இருக்கிறது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி உருவாக காரணமாக இருந்த முக்கிய கட்சி ஒன்று தற்போது அந்த கூட்டணியில் இருந்தே விலக்கப்பட்டு இருக்கிறது. இது தேசிய அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி - ராஷ்ட்ரிய லோக் தளம் சேர்ந்து போட்டியிடுகிறது. அங்கு மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இந்தியா முழுக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில்தான் உத்தர பிரதேச அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்!
என்ன வரலாறு
கடந்த 2018 மார்ச் மாதம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற காரணத்தால் அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கோராக்பூர் தொகுதி காலியானது,. அதேபோல் கேசவ்பிரசாத் மவுரியா துணை முதல்வராக பதவியேற்றத்தால் பஹல்பூர் நாடாளுமன்ற தொகுதி காலியானது.
கூட்டணி வைத்து போட்டி
இந்த இரண்டிலும் கூட்டணி வைத்து பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி போட்டியிட்டது. இந்த கூட்டணியில் அம்மாநில கட்சியான நிஷாத் கட்சி இடம்பெற்று இருந்தது. இந்த நிஷாத் கட்சி, பிற்படுத்தப்பட்ட நிஷாத் ஜாதியினருக்கான கட்சியாகும். இதன் தலைவர் பிரவீன் நிஷாத்தான் சமாஜ் வாதி சின்னத்தில் கோரக்பூரில் போட்டியிட்டு, அங்கு வெற்றிபெற்றார்.
இவர்தான் காரணம்
இந்த பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி கூட்டணிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இந்த கூட்டணி உருவாக்க பிரவீன் நிஷாத் முக்கிய பின்புலமாக இருந்தார். இந்த நிலையில் நிஷாத் கட்சி தற்போது இந்த பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது.
என்ன காரணம்
இதே பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் பிரவீன் நிஷாத் மீண்டும் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்த தொகுதியை மீண்டும் வழங்க அகிலேஷ் யாதாவிற்கு விருப்பம் இல்லை. இதனால் தற்போது பிரவீன் நிஷாத்தின் நிஷாத் கட்சி கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
பாஜகவில் சேர்க்கிறது
அதோடு பாஜகவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவும் நிஷாத் கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த கட்சிதான் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் சறுக்கலுக்கு காரணமாக இருந்தது. தற்போது அதே கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்க இருக்கிறது. இன்னொரு புறம் வேறு ஒரு திருப்பமாக, நிஷாத் ஜாதியை சேர்ந்த வேட்பாளரை இதே தொகுதியில் களமிறக்க அகிலேஷ் யாதவ் முடிவெடுத்து இருக்கிறார்.