ஹாத்ராஸ் சம்பவம்.. இதோ.. இன்று உ.பி. ஹைகோர்ட்டும் கண்டனத்தைக் கொட்டி விளாசி விட்டது!
லக்னோ: ஹத்ராஸில் பெண் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் அந்த பெண்ணின் இறுதிச் சடங்குகள் குறித்து யார் கேள்வி எழுப்பினாலும் திமிராக பதில் அளித்த உத்தரப்பிரதேச மாநில போலீஸுக்கு ஏற்கெனவே நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அலகாபாத் ஹைகோர்ட் லக்னோ கிளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹத்ராஸில் 19 வயது பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீஸ்காரர்களே பெட்ரோல் ஊற்றி எரித்து இறுதிச் சடங்கை செய்து விட்டார்கள்.
இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கிளை நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகளான பங்கஜ் மித்தல், ராஜன் ராய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
உங்கள் மகளாக இருந்தால் அனுமதித்து இருப்பீர்களா... உபி போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் சூடு!!
கொலை
அப்போது அவர்கள் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உங்கள் மகளாக இருந்தால் இதே போன்று இறுதிச் சடங்குகளை செய்திருப்பீர்களா. ஒருவேளை கொலை செய்யப்பட்ட பெண் பணக்காரராக இருந்தாலும் இதே போன்ற நடவடிக்கையை எடுத்திருப்பீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
உரிமை
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா, அந்த பெண்ணின் சடலத்திற்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டனவா, இல்லை சட்டவிரோதமாக இந்த இறுதிச் சடங்கு நடத்தப்பட்டதா என 3 விவகாரங்களை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒருவேளை ஏதாவது தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றனர்.
தெனாவட்டு
இறந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் கூட ஒப்படைக்காமல் போலீஸாரே தகனம் செய்தது குறித்து நாடு முழுவதும் கண்டன அலைகள் வீசுகின்றன. மேலும் அங்கு எரிந்து கொண்டிருப்பது என்னவென பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு அதை போய் கலெக்ரடரிடம் கேளுங்கள் என தெனவட்டாக பதில் அளித்திருந்தார்.
எப்படி நம்புவது
அது போல் அங்கு எரிந்து கொண்டிருப்பது எங்கள் மகள்தானா என்பதை நாங்கள் எப்படி நம்புவது என பெற்றோர் கேட்டிருந்தனர். ஆனால் எந்த கேள்விகளுக்கும் உத்தரப்பிரதேச போலீஸ் பதிலளிக்கவில்லை. மாறாக ஜாதி கலவரம் நடைபெறக் கூடாது என்பதால் அவசர அவசரமாக தகனம் செய்ததாக நியாயமே இல்லாத ஒரு காரணத்தை கூறினர். ஆனால் இன்று நீதித்துறையின் கண்டனத்தையும் சேர்த்து வாங்கிக் கட்டிக் கொண்டது உ.பி. போலீஸ்.