பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தா என் கட்சியையே குளோஸ் பண்ணிடுவீங்க... அமித்ஷாவுக்கு ஜெயந்த் சவுத்ரி பதிலடி
லக்னோ: பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ராஷ்டிரிய லோக் தள் கட்சியையே அழித்துவிடுவீர்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அக்கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை இத்தேர்தல் நடைபெறும். மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேற்கு உ.பி. நிலவரம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர்கள் பட்டாளத்தையே இறக்கியுள்ளது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஜாட்-முஸ்லிம்கள் இணைந்து நிற்பதால் சமாஜ்வாதி கட்சி- ராஷ்டிரிய லோக்தள் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக வாக்குகள் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. மேற்கு உ.பி.யில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜாட் தலைவர்களுடன் சந்திப்பு
இதனையடுத்தே ஜாட் சமூகத் தலைவர்களை அமித்ஷா அழைத்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜாட்களின் கட்சியான ராஷ்டிரிய லோக் தள் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, பாஜக அணியில் சேருவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அமித்ஷாவின் அழைப்பை ஜெயந்த் சவுத்ரி நிராகரித்துள்ளார்.
அமித்ஷா அழைப்பு நிராகரிப்பு
இது தொடர்பாக ஜெயந்த் சவுத்ரி கூறியதாவது; எந்த ஒரு காலத்திலும் நான் பாஜகவில் சேர மாட்டேன். பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் கூட எங்கள் கட்சியையே இல்லாமலேயே ஆக்கிவிடுவர். அமித்ஷா எங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இத்தகைய அழைப்பை ஓராண்டு கால டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாய குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ஜாட்களை உ.பி.யில் அமித்ஷா தனிமைப்படுத்த முயற்சிக்கிறார். ஒரு காலத்திலும் இது நடக்காது. இவ்வாறு ஜெயந்த் சவுத்ரி கூறினார்.
Recommended Video
கள நிலவரம் என்ன?
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் சமாஜ்வாதி கட்சி-ராஷ்டிரிய லோக் தள் கூட்டணி கடும் போட்டியை களத்தில் உருவாக்கும் என்பதையும் அந்த கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் ஜாட்கள், முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஒருங்கிணைந்து நிற்பதால் உ.பி. தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்புகள் தலைகீழாக மாறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.