"மிருகம்".. 5ம் வகுப்பு மாணவன் கையில் டிரில் மிஷினால் ஓட்டை போட்ட ஆசிரியர்.. காரணத்தை கேளுங்க
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 5-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுவனின் கையில் ஆசிரியர் ஒருவர் டிரில் மிஷினால் ஓட்டை போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் மாணவன் கையில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாகி உள்ள அந்த கொடூர ஆசிரியரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசிரியர்களை மிரட்ட.. பள்ளி வராண்டாவில் கையில் அரிவாளுடன் வலம் வந்த தலைமை ஆசிரியர்.. பரவும் வீடியோ!
ஆசிரியர்கள் நிகழ்த்தும் வன்முறை..
சமீபகாலமாக, மாணவர்கள் மீது ஆசிரியர்கள் அதிகப்படியான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதை பார்க்க முடிகிறது. மாணவர்களை பெற்றோர்கள் ஸ்தானத்தில் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கிறதுதான். இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், கண்டிப்பு என்ற பெயரில் தங்கள் மனதில் இருக்கும் வன்மத்தையும், குரூரத்தையும் மாணவர்கள் மீது ஆசிரியர்கள் காட்டுகிறார்களோ என்ற சந்தேகம் அண்மைக்காலங்களில் நிகழும் சம்பவங்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன.
காட்டுமிராண்டித்தனமாக..
வீட்டுப்பாடம் செய்து வராத மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர், உயர் ஜாதி வகுப்பினர் தண்ணீர் குடிக்கும் பானையில் நீர் அருந்தியதால் தாழ்த்தப்பட்ட மாணவனை அடித்துக் கொலை செய்த ஆசிரியர் என்பன போன்ற செய்திகள் குலைநடுங்கச் செய்கின்றன. அப்படியொரு கொடூர சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் தற்போது நடந்துள்ளது. கான்பூரின் பிரேம் நகரில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி கொடுப்பதற்காக அண்மையில் அஜித் சிங் (32) என்ற ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பம் முதலாகவே, மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாகவே அவர் தாக்கி வந்திருக்கிறார். சிறிய தவறு என்றாலும், மாணவர்களை மிக மோசமாக தாக்குவதை இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
டிரில் மிஷினை எடுத்து..
அந்த வகையில், நேற்று 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அஜித் சிங் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ராகுல் என்ற மாணவனிடம் 2-ம் வாய்ப்பாடை கூறுமாறு அஜித் சிங் கேட்டிருக்கிறார். ஆனால், சிறுவன் ராகுலுக்கு சரியாக வாய்ப்பாடு சொல்ல வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அஜித் சிங், தான் கொண்டு வந்திருந்த மிஷினை எடுத்து திடீரென மாணவனின் கையில் ஓட்டை போட்டார். இதில் மாணவனின் கையில் இருந்து ரத்தம் பீய்த்து அடித்திருக்கிறது. சிறுவனும் வலியில் அலறி துடித்துள்ளான். ஆனாலும், விடாத ஆசிரியர், தொடர்ந்து கையில் ஓட்டை போட்டிருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் ஓடிச்சென்று டிரில் மிஷின் சொருகப்பட்டிருந்த ப்ளக் பாயிண்ட்டை ஆஃப் செய்தனர்.
போராட்டம் - வழக்குப் பதிவு..
மாணவர்களின் இந்த அலறல் சத்தம் கேட்டு அங்கு மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் கூடவே பயந்து போன ஆசிரியர் அஜித் சிங், சுவர் ஏறி குதித்து தப்பினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்த மாணவன் ராகுலை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அஜித் சிங்கை தேடி வருகின்றனர். இதற்கிடையே, இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.