இளம் பெண்ணை கல்லூரிக்குள் இழுத்துச் சென்ற மாணவர்கள்.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அட்டூழியம்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சிவில் சர்வீசஸ் (பிசிஎஸ்) முதல் நிலைத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதே கல்லூரி வளாகத்தில் அங்கு படிக்கும் மாணவர் ஒருவரால் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அதை கூட்டாக மாணவர்கள் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன.
அண்மைக்காலமாக உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் சம்பவங்கள் நாடடில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.அடுத்தடுத்து பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் மோசமான சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உங்கள் மகளாக இருந்தால் அனுமதித்து இருப்பீர்களா... உபி போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் சூடு!!
ஹாஸ்டலுக்குள் இழுத்தனர்
ஜான்சி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்புக்கு போலீசாரும் அங்கிருந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் கல்லூரியின் கேட்டில் இருந்து அதே கல்லூரி வளாகத்திற்குள் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை கல்லூரி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றிருக்கிறார்கள்.
ஆபாசமாக வீடியோ எடுத்தனர்
விடுதியில் உள்ளே ஒரு அறைக்கு இழுத்து சென்று மாணவர்கள் துன்புறுத்தியிருக்கிறார்கள். பின்னர் ஒரு மாணவர், அந்த 17 வயது மாணவியை மிரட்டி, துன்புறுத்தி பாலியல் பாலத்காரம் செய்திருக்கிறார். அதை அங்கிருந்த மாணவர்கள் ஜாலியாக அதை வீடியோவாக எடுத்திருக்கிறார்கள். அத்துடன் மாணவியிடம் இருந்த 2000 ரூபாய் பணத்தை பறித்துள்ளார்கள். பின்னர் இங்கு நடந்த பலாத்காரத்தை வெளியில் சொன்னால் உன் வீடியோ சமூக வலைதளங்களில் வரும் என்று மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள்.
நடந்த விபரீதம்
இந்நிலையில் சாலையில் அழுது கொண்டே சென்ற சிறுமியை அழைத்து விசாரித்த போலீஸார் நடந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஜான்சி சிப்ரி பஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு தனக்கு நடந்த கொடூரத்தை கண்ணீர் மல்க விவரித்துள்ளார். தான் தனது நண்பரை சந்திக்க கல்லூரி வளாகத்தில் உள்ள கேட் முன் சென்றதாகவும் அப்போது அங்கு வந்த மாணவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறினார்.
8 மாணவர்கள் கைது
அத்துடன் தன்னை பலாத்காரம் செய்த நபர் பாரத் என்று அடையாளம் காட்டினார். இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்த விரைந்து செயல்பட்ட போலீஸ், இந்த பாலியல் வன்முறை தொடர்பாக 8 மாணவர்களை கைது செய்துள்ளனர். இந்த தகவலை ஜான்சி எஸ்.எஸ்.பி தினேஷ்குமார் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு பிரிவில் வழக்கு
இதனிடையே ரோஹித் சைனி, பாரத் குஷ்வாஹா, ஷைலேந்திர நாத் பதக், மாயங்க் சிவஹரே, விபின் திவாரி, மோனு பர்யா, தர்மேந்திர சென் மற்றும் சஞ்சய் குஷ்வாஹா என 8 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 டி (கும்பல் கற்பழிப்பு குற்றச்சாட்டு), 386 (மிரட்டி பணம் பறித்தல்), 323 (காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 120 பி (கிரிமினல் சதி) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 டி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
முழு ஒத்துழைப்பு அளிப்போம்
கல்லூரி முதல்வர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற மாணவர்கள் யார் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு கல்லூரி சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று தெரிவித்தார்.