விகாஸ் துபே என்கவுண்ட்டர்- காரை கவிழ்த்து ரகசியங்களை பதுக்கிய உ.பி. யோகி அரசு: அகிலேஷ் சாடல்
லக்னோ: விகாஸ் துபே என்கவுண்ட்டர் விவகாரத்தில் தாங்களே காரை கவிழ்த்துவிட்டு ரகசியங்களை பதுக்கிவிட்டது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.
Recommended Video
உத்தரப்பிரதேச ரவுடி விகாஸ் துபே, மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் நேற்று சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டவர் விகாஸ் துபே.
விகாஸ் துபேவின் கூட்டாளிகளை அடுத்தடுத்து என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றது உ.பி. போலீஸ். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் கான்பூருக்கு விகாஸ் துபேவை அழைத்து வந்தது சிறப்பு அதிரடிப் படை குழு.
ஆனால் விகாஸ் துபேவை அழைத்து வந்த கார் விபத்தில் சிக்கியதாகவும் அதில் இருந்து விகாஸ் தப்ப முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் என்கவுண்ட்டரை நடத்தி முடித்தது உ.பி. போலீஸ். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காரை உ.பி. போலீசாரே கவிழ்த்துவிட்டிருக்கின்றனர். இதன்மூலம் விகாஸ் துபேவின் ரகசியங்களையும் பதுக்கிவிட்டனர் என விமர்சித்துள்ளார்.
ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சுட்டுக் கொலை... பாஜக எம்எல்ஏவை சந்தித்த விகாஸ்.. என்ன நடக்கிறது உபியில்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறுகையில், உஜ்ஜைனியில் பதுங்க கோவிலை விகாஸ் துபே ஏன் தேர்வு செய்ய வேண்டும்? மத்திய பிரதேசத்தில் விகாஸ் துபே பதுங்குவதற்கு உதவி செய்தது யார்? என கேள்வி கேட்டுள்ளார்.