இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர்.! அடக்கம் செய்வதற்கு முன் அசைந்த உடல்.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
லக்னோ: விபத்தில் இறந்து போனதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 20 வயது இளைஞருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்படும் முன் அவர் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முகமது பாரூக்கான். அவர் கடந்த ஜூன் 21ம் தேதி விபத்தில் சிக்கியதால் தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த பாரூக்கான் உடல்நிலை மோசமடைந்து கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள், இதையடுத்து மருத்துவமனையில் இருந்து முகமது பாரூக்கானின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர். அவரது பிரிவு தாங்காமல் கதறியழுத உறவினர்கள் பின்னர் அவரது உடலை எடுத்து கொண்டு போய் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
இதனையடுத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட முகமது பாரூக்கானின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் தயாரானார்கள். அப்போது திடீரென பாரூக்கின் உடலில் அசைவுகள் இருப்பதை கண்டு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சில் பாரூக்கின் உடலை எடுத்துக்கொண்டு ராம் மோகன்ராவ் லோகியா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்தனர்.
இதுபற்றி விசாரித்த மருத்துவர்கள், உடனடியாக பாரூக்கின் உடல்நிலையை பரிசோதித்து உயிர் இருப்பதை உறுதி செய்தனர். அவருக்கு வென்லேட்டிரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்துவருகிறார்கள்
இது தொடர்பாக முகமது பாரூக்கின் அண்ணன் முகமது இப்ரான் கூறுகையில், முகமது பாரூக்கானின் உடலை அடக்கம் செய்யவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தோம். அப்போது பாரூக்கின் உதடு அசைவது தெரிந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்தோம். இப்போது மருத்துவர்கள் வெண்டிலேட்டரில் வைத்து சிசிக்சை அளித்து வருகிறார்கள்.
நாங்கள் என் தம்பியை காப்பாற்ற தனியார் மருத்துவமனையில் ரூ.7லட்சம் வரை பணம் கட்டினோம். அதன் பிறகு எங்களிடம் பணம் இல்லை என்று சொன்னோம். அதனால் அவர்கள் தம்பியை திங்கள் அன்று இறந்துவிட்தாக அறிவித்துவிட்டார்கள்" என குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் நரேந்திர அகர்வால் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். இச்சம்பவத்தின் உண்மை குறித்து முழுமையாக ஆராயப்படும். சம்பந்தப்பட்ட நோயாளியின் நிலை மோசமாகவே உள்ளது. ஆனால் நிச்சயம் இது மூளைச்சாவு கிடையாது. அவருக்கு இரத்த ஓட்டம், இதய துடிப்பு எல்லாம் இருக்கிறது. வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார்.