முஸ்லீம் வியாபாரிகளிடம்.. காய்கறிகளை வாங்காதீங்க.. உ.பி. பாஜக எம்எல்ஏ அதிர்ச்சி பேச்சு
லக்னோ: நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்கும் மக்களை எச்சரித்து உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆனால் தனது பேச்சில் என்ன தவறு என்று அந்த எம்எல்ஏ கேட்டிருப்பது சர்ச்சையை மேலும் வலுவடைய வைத்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த எம்எல்ஏவின் பெயர் சுரேஷ் திவாரி. தியோரியாவைச் சேர்ந்தவர்.
74 வயதான இவர் ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், "ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். நான் எல்லோரிடமும் வெளிப்படையாக சொல்கிறேன். 'மியாஸிடமிருந்து' (முஸ்லீம்கள்) காய்கறிகளை வாங்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் பேசியுள்ளார்.
ஏற்கனவே இவர் கொரோனாவை பரப்புவதாக முஸ்லீம்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு எழுந்த கடும் விமர்சனங்களை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் எனது தொகுதியில் இருந்தேன், நான் 10-12 பேர் கொண்ட குழுவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஊரடங்கு குறித்து நாங்கள் உரையாட ஆரம்பித்தோம். காய்கறிகளை விற்கும் முஸ்லீம் விற்பனையாளர்கள், அவர்கள் மீது துப்புகிறார்கள் என்று எனக்குத் தெரிவித்தார்கள்.
கொரோனாவை தடுக்க
"எனவேதான் அப்படி சொன்னேன். விற்பனையாளர்களிடமிருந்து கொரோனா வைரஸ் வராமல் பார்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்ட போது .... ஒரு எம்.எல்.ஏ என்ன சொல்ல வேண்டுமோ அதை சொன்னனேன் ? நான் சொன்னதில் என்ன தவறு? ஏன் இதை ஒரு பெரிய பிரச்சினையாக மாற்ற வேண்டும்? "
இந்துக்கள் குறித்து
அசாதுதீன் ஓவைசி (AIMIM தலைவர் ) இந்துக்களைப் பற்றி ஆட்சேபகரமான விஷயங்களைச் சொல்கிறார். யாரும் கவலைப்படுவதில்லை, ஒரு எம்.எல்.ஏ தனது தொகுதியில் உள்ளவர்களிடம் தங்கள் நலனுக்காக ஏதாவது சொன்னால், இவ்வளவு பிரச்சினைகள் நடந்துள்ளன" என்றார். இந்நிலையில எம்எல்ஏவின் இந்த விளக்க கருத்துக்கு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதம் பார்ப்பது இல்லை
திவாரி கருத்து தெரிவிப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நடிகையும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நக்மா கடும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த வாரம், பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனைவரையும் சமமாக பாதிக்கிறது என்று கூறியிருந்தார். கொரோனா மக்களை தாக்கும் முன்பு இனம், மதம், நிறம், சாதி, மதம், மொழி அல்லது எல்லை பார்ப்பது இல்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்
முற்றிலும் பொய்யானது
உத்தரபிரதேசத்தில், கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்புவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசு மற்றும் காவல்துறையினர் பலமுறை முறையிட்டுள்ளனர். இதற்கு மத்தியில், முஸ்லிம் விற்பனையாளர்கள் குறிவைக்கப்பட்ட பல சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. திங்களன்று, லக்கிம்பூர் நகரில் ஒரு முஸ்லீம் பழ விற்பனையாளர் தர்பூசணிகளை விற்பனை செய்வதற்கு முன்பு துப்பியதாக குற்றம் சாட்டி தாக்கினார்கள். அவரை போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டது.