உ.பி.யில் பாஜக எம்பியின் மகன் மீது துப்பாக்கிச்சூடு; மைத்துனர் கைது!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜக எம்பியின் மகன் மர்ம நபர்களால் சுடப்பட்டார். இது தொடர்பாக அவரது மைத்துனரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் பாஜக எம்பியின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆயுஷ் கிஷோரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும், மோகன்லால்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் இருப்பவர் கவுஷல் கிஷோர். இவரது மகன் ஆயுஷ் கிஷோர். இந்த நிலையில் இவர் இன்று காலை தனது மைத்துனருடன் நடைபயிற்சியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆயுஷ் கிஷோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் மார்பில், தோள் பட்டையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆயுஷ் கிஷோரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவரது மைத்துனர் ஆதர்ஷ், ஆயுஷ் கிஷோர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.