சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும்..மார்ச் 10ம் தேதி எப்படி அவமானப்படுவாங்கனு பாருங்க-யோகி ஆதித்யநாத்
லக்னோ : நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன. உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பல தரப்பினரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
உ.பியில் பாஜகவிற்குதான் பெரும்பான்மை.. டஃப் பைட் கொடுக்கும் அகிலேஷ்.. ஜீ நியூஸ் பரபர சர்வே!
உத்திர பிரதேச சட்டசபை தேர்தல்
2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் காண்கிறார் யோகி.தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சி தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் ஜுரம்
தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. பிரச்சாரங்கள், வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வரும் நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்த போதும் எப்படியாவது மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிறுத்த வேண்டும் என அகிலேஷ் யாதவ் பல்வேறு வியூகங்களை வகுத்து பாஜக அமைச்சர்களை தூக்கி வருகிறார்.
தேர்தலில் படுதோல்வி
இந்நிலையில் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான சூழல் மாநிலத்தில் இல்லை எனவும் எப்படியும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றும் எனவும் மார்ச் 10ஆம் தேதி அன்று வெளியாக உள்ள தேர்தல் முடிவில் அது மக்களுக்கு தெரியவரும் என கூறிய அவர், அதனை மனதளவில் எதிர்கொள்ள சமாஜ்வாதி கட்சி தயாராகி விட்டது , தோல்வி அந்த கட்சிக்கு அவமானகரமான தோல்வியாக அமையும் என்றார்.
எங்கு போட்டியிட்டாலும் விமர்சனம்
கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர் நான் வேறு எந்த தொகுதியில் போட்டியிட்டு இருந்தாலும் அதனை விமர்சகர்கள் குற்றம் சாட்டி இருப்பார்கள் எனக் கூறிய யோகி தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் அகிலேஷ் யாதவ் சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி வருகிறார் எனவும் குற்றவாளிகளுக்கும் மாநிலத்தில் கலவரம் செய்கின்ற ரவுடிகளுக்கும் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் யோகி கூறியுள்ளார்.