உ.பி தேர்தல்: ஆதித்யநாத் vs அகிலேஷ்.. எந்த கட்சிக்கு அதிக வெற்றிவாய்ப்பு? ஏபிபி சி வோட்டர் சர்வே!
லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 45.3 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சேனல் - சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாதி, காங்கிரஸ் என்ற மிகப்பெரிய நான்கு முனை போட்டி அங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய லோக் தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முக்கிய கேம் சேஞ்சர்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் உத்தர பிரதேச தேர்தல் குறித்தும் அங்கு யாருக்கு அதிக வெற்றிவாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.
இறையன்பு எச்சரித்தும் இன்று வரை தொடரலாமா?.. முதல்வரே நடவடிக்கை எடுங்க.. அறப்போர் இயக்கம் பரபர ட்வீட்
கருத்து கணிப்பு
இந்த கருத்து கணிப்பில் புதிய அரசு உத்தர பிரதேசத்தில் அமைய வேண்டுமா என்ற கேள்விக்கு 48.3 சதவிகிதம் பேர் ஆதித்யநாத் அரசு மீது கோபத்தில் இருப்பதாகவும், ஆட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 27.5 சதவிகிதம் பேர் ஆட்சி மீது கோபத்தில் இருக்கிறோம். ஆனால் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
ஆதித்யநாத் அரசு
24.2 சதவிகிதம் பேர் ஆட்சி மீது கோபத்தில் இல்லை. இதனால் ஆட்சி மாற்றம் தேவை இல்லை என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் ஆட்சி மீது கோபமாக இருப்பதாகவும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் கூறி உள்ளதாலும் பாஜகவிற்கு இது கொஞ்சம் நெகட்டிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு
ஆனால் இதற்கு எப்படி எதிராக எந்த கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு கொண்டுள்ளது என்ற கேள்விக்கு பாஜகவிற்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி பாஜக கூட்டணிக்கு 45.3 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். சமாஜ் வாதி கட்சிக்கு 29.8 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 8.1 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 3.3 சதவிகிதம் பேர் மற்ற கட்சிகளுக்கும், 2.7 சதவிகிதம் பேர் தொங்கு சட்டசபை உருவாகும் என்றும் கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிக கவனத்தை உண்டாக்கும் பிரச்சனை எது என்ற கேள்விக்கு 26.9 சதவிகிதம் விவசாய போராட்டம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். ஜாதி, மத பிரச்சனைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 16.1 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.
கொரோனா
கொரோனாவை கட்டுப்படுத்த தவறியது 15.2 சதவிகித பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ரவுடிகளை ஒழிக்க தவறிய பிரச்சனை 13.5 சதவிகித பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இமேஜ் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று 6.1 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் பொருளாதார நிலை 3.3 சதவிகிதம் பங்களிப்பை தேர்தலில் ஏற்படுத்தும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.