மத்தியப்பிரதேசம் ஆளுநர் பொறுப்பு... உபி ஆளுநர் ஆனந்தி பென்னிடம் ஒப்படைப்பு!!
லக்னோ: மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் காலமானார். அந்த மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11 ஆம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த லால்ஜிக்கு வயது 85. இவரது மரணத்தை இவரது மகன் அஷுதோஷ் டாண்டன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாபுஜி காலாமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய காரணங்களால் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.
மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்...பிரதமர் இரங்கல்!!
இதற்கு முன்னதாக லால்ஜியின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்த மெதந்தா மருத்துவமனை, வென்டிலேட்டரில் இருக்கும் லால்ஜி உடல் நலம் தேறி வருகிறார் என்று தெரிவித்து இருந்தது.
இவரது மரணத்துக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சமூகத்துக்கு களைப்பில்லாமல் பணியாற்றியவர் லால்ஜி. அரசிலமைப்பு சட்டத்தை நன்கு அறிந்தவர். அடல்ஜியுடன் நெருங்கிய நீண்ட நாட்கள் தொடர்பில் இருந்தவர். இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.