உ.பி. கல்விச் சூழலை மேம்படுத்த கல்லூரி, பல்கலை.களில் செல்போன் பயன்பாட்டுக்கு அதிரடி தடை!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கல்விச் சூழலை மேம்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு அதிரடி தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில உயர்கல்வித் துறை இயக்குநரகம் அம்மாநில கல்வி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மட்டுமில்லாமல் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் இத்தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது அரசு சார் கூட்டங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.