'திருமணத்தை பயன்படுத்தி கட்டாய மதமாற்றம் பண்றாங்க..' லவ் ஜிகாத் சட்டம் குறித்து உபி அரசு விளக்கம்
லக்னோ: தனிநபரின் விருப்பத்திற்கு மாறாக மதமாற்றத்தை மேற்கொள்ளத் திருமணம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாலேயே உபி அரசு சட்டவிரோத மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்து பெண்களைக் காதலிப்பது போல நடித்து, திருமணம் சமயத்தில் அவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதாக பாஜக தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களும் சட்டங்கள் இயற்றியுள்ளன.
அதன்படி யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசும் சட்டவிரோத மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்திருந்தது. இந்தச் சட்டத்திற்கு எதிராக லக்னோ உயர் நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து இழிவான பேச்சு-நாம் தமிழர் கட்சியின் முத்துராமன் மீது போலீசில் புகார்
சமூக நலனைப் பாதுகாக்க
இந்நிலையில், உபி அரசு இது தொடர்பாக தற்போது லக்னோ உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "சமூகத்தின் நலன் என்பது எப்போதும் தனிமனித நலனைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் உ.பி அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. கட்டாய மதமாற்றம் தொடர்பாக சமூகத்தில் உள்ள பெரும்பகுதி மக்களுக்கு கடும் அச்சம் நிலவுகிறது. இதனால் சமூகத்தின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள்
உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாட்டில் மொத்தம் 8 மாநிலங்களில் இதேபோன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி நேபாளம், மியான்மார், பூடான், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற சட்டங்கள் உள்ளது. மேலும், கட்டாய மதமாற்றம் என்பது உண்மையில் மாநிலம் முழுவதும் ஒருவித அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது. அதனால் தான் இந்தச் சட்டம் நமக்குத் தேவைப்படுகிறது.
என்ன காரணம்
இந்து பெண் ஒருவர் இஸ்லாமிய ஆண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் தனது இந்து நம்பிக்கையை விட்டுவிடக் கூடாது என்று விரும்பினாலும், முறையான திருமண பந்தத்தில் நுழைய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் கட்டாய மதமாற்றம். ஒரு இந்து ஆண் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினாலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இந்து பையன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும்.
தனிமனித சுதந்திரம்
இவை ஒருவரின் கண்ணியத்தை இழக்கச் செய்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் மதமாற்றம் என்பது வாய்ப்பாக யாருக்கும் அளிக்கப்படுவதில்லை. மாறாக அதை ஒருவரின் தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு இதைக் கட்டாயப்படுத்தித் திணிக்கிறார்கள். அதைத் தடுக்கும் வகையிலேயே இந்தச் சட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்" என்று உபி அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2020 முதல் 2021 ஜூலை 6ஆம் தேதி வரை கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக உபி-இல் மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லவ் ஜிகாத் சட்டம்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உபி அரசு லவ் ஜிகாத் என்று பரவலாக அழைக்கப்படும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின் கீழ் திருமணம் மூலம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட முயல்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ₹ 50,000 அபராதம் விதிக்க முடியும். லவ் ஜிகாத்தை தடுக்கும் வகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். அதேநேரம் முஸ்லிம்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலேயே உபி அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகப் பல சமூக ஆர்வலர்களும் விமர்சித்துள்ளனர்.