மொத்தம் 40,000 அகதிகள்.. முதல் மாநிலமாக சிஏஏவை அமல்படுத்திய உத்தர பிரதேசம்.. ஆதித்யநாத் அதிரடி!
உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் 40 ஆயிரம் பேரின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் 40 ஆயிரம் பேரின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் உருவெடுத்துள்ளது.
பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது சட்டமானது. நாடு முழுக்க இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று பாஜக கூட்டணியில் அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் இந்த சட்டத்தை பெரிய அளவில் போராட்டங்களை சந்தித்து வருகிறது. கேரள அரசு இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றியுள்ளது.
உத்தர பிரதேசம் எப்படி
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை திருத்தத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் உருவெடுத்துள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் 40 ஆயிரம் பேரின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடி சீக்கியர்கள் அதிகமாக உள்ளனர்.
பட்டியல்
மொத்தம் 19 மாவட்டங்களில் இந்த பட்டியல் முதல் கட்டமாக எடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பிட் மாவட்டத்தில் மட்டும் 30,000 முதல் 35,000 பேர் இருக்கிறார்கள் என்று பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் புதிய பெயர்களை வருகிற நாட்களில் சேர்த்துக் கொண்டே வருவோம் என்று உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
யார் இவர்கள்
இவர்கள் எல்லோரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து குடியேறிய அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆக்ரா, ரே பரேலி, சஹரன்பூர், கோரப்பூர், அலிகார்க், ராம்பூர், முசாபர்நகர், ஹாபூர், மதுரா, கான்பூர், பிரதாப்கர்க், வாரணாசி, அமேதி, ஜான்சி, லக்னோ, பிலிப்பிட், மீரட் பகுதியில்தான் அதிக அகதிகள் இருந்துள்ளனர்.
குடியுரிமை என்ன
இந்த பட்டியலை தற்போது உத்தர பிரதேச அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பும். இவர்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மற்ற பாஜக ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்தை விரைவில் அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .