ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசததில் உள்ள ஒரு கிராமத்தில். ஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் அந்த கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 91 லட்சம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை செலுத்தாமல் அந்த கிராம மக்கள் பாக்கி வைத்திருந்ததால் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது ஜகன்புரா என்ற கிராமம். இங்கு மொத்தம் 300 வீடுகள் காணப்படுகிறது. ஜகன்புரா கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூட கடந்த மாதம் தங்களது மின் கட்டணத்தை செலுத்தவில்லை. இதன் மூலம் அனைவரின் கட்டண பாக்கி என்பது ரூ.91.88லட்சம் ரூபாய் ஆகும். உத்தரப்பிரதேச மின் நிறுவனம் கடுமையான வருவாய் இழப்பை சந்தித்ததால், மின் கட்டணத்தை வசூலிக்கும்படி அந்த பகுதி மின்சார வாரிய அதிகாரிக்கு உத்தரவிட்டது.
டெல்லியிலிருந்து சென்னை உள்பட தமிழகத்துக்கு பரவும் காற்று மாசு.. என்ன காரணம்?- வெதர்மேன் விளக்கம்
அந்த மின்சார வாரிய அதிகாரியும் கிராம மக்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துங்கள் என நினைவூட்டல் கடிதம் அனுப்பினார். ஆனால் யாருமே அவரது நினைவூட்டல் கடிதத்தை பொருட்டாக கருதவில்லை. அத்துடன் மின் கட்டணத்தை ஒருவர் கூட செலுத்த முன்வரவில்லை.
இதனால் அந்த கிராமம் முழுவதுக்கும் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த கிராமம் இருளில் மூழ்கி கிடக்கிறது. மீண்டும் மின் கட்டணத்தை செலுத்தினால் மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.