அரசியல் தொடர்பு.. ஜாதி கொலை.. உ.பியின் "ராஜனாக" உருவெடுத்த விகாஸ் துபே.. புதுப்பேட்டை ஸ்டைல் வரலாறு!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 1992ல் தனது முதல் கொலையை செய்த விகாஸ் துபேவின் வாழ்க்கை வெறும் 28 வருடத்தில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து, அந்த பகுதியின் பெரிய டானாக உருவெடுத்து இருக்கிறார்.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் 1992ல் நடந்த ஒரு ஜாதி படுகொலை, இவ்வளவு பெரிய கேங்ஸ்டரை உருவாக்கும் என்று அப்போது யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். ரத்தம் நிரம்பிய பாதையில் நடந்து வந்து விகாஸ் துபே உத்தர பிரதேச ரவுடி சாம்ராஜ்யத்தின் ராஜனாக உருவெடுத்து இருக்கிறார்.
28 வருட ரவுடி வரலாறு கொண்டு இவருக்கு எதிராக 66 கேஸ்கள் உள்ளது. இதில் நேரடி கொலை கேஸ் என்று பார்த்தால் 5 கேஸ்கள். அதோடு தற்போது 8 போலீசாரை கொன்ற கேஸ்கள் உள்ளது.
ரவுடி துபே கதையை என்கவுண்ட்டரில் முடித்த தமிழர்- கான்பூர் எஸ்.பி. 'தீரன்' தினேஷ்குமார்-பரபர தகவல்!
எப்படி வளர்ந்தார்
உத்தர பிரதேசத்தில் மத அரசியல் விஸ்வரூபம் எடுக்கும் முன் ஜாதி ரீதியாக நிறைய கொலைகள் நடந்தேறிய சமயம் அது. முக்கியமாக தலித் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இன்னொரு பக்கம் தலித் அரசியல் தலைவர்களின் எழுச்சியும் ஏற்பட தொடங்கியது. அப்போதுதான் 1990ல் 20 வயதே நிரம்பிய விகாஸ் துபே தலித் இளைஞர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டு, பின் சில ஜாதி சங்க தலைவர்களின் வேண்டுகோளால் விடுதலை செய்யப்பட்டார்.
முதல் கொலை செய்தார்
1992ல்தான் இவர் தனது முதல் கொலையை செய்தார். அடுத்தடுத்து இரண்டு தலித் இளைஞர்களை இவர் சாதி படுகொலை செய்தார். அப்போதுதான் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. இவருக்கு எதிராக தற்போது வழக்கு பதிந்து, இவரை என்கவுண்டர் செய்த அதே செபாபூர் போலீஸ்தான் இவருக்கு எதிராக அப்போதும் வழக்கு பதிவு செய்தது. அதன்பின் விகாஸின் கேங்ஸ்டர் கிராப் வேகமாக வளர தொடங்கியது.
முதல் சிறை
அப்போதுதான் இவருக்கு பின் குட்டி கேங் உருவானது. இவரை வெளியே கொண்டு வந்த உள்ளூர் அரசியல் தலைகள் சின்ன சின்ன ஸ்கெட்ச்களுக்கு இவரை பயன்படுத்த தொடங்கியது. புதுப்பேட்டை படத்தில் தனுஷ் வளர்ந்து வருவது போலவே கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கும் அரசியல் தொடர்பு கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினருக்கு இப்போதும் இவர் ஒரு ''பாகுபலி'' என்று கூறுகிறார்கள். இவருக்கு அரசியல் தொடர்பும் இருந்தது.
இரண்டு கட்சிகள்
உத்தர பிரதேசத்தின் முக்கியமான இரண்டு கட்சிகளான பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளுக்கு இவர் மிக நெருக்கமாக இருந்தார். முக்கியமாக அரசியல் ரீதியாக தேர்தல் நேரத்தில் ஜாதி ஓட்டுக்களை பெறவும், நிலங்களை அபகரிக்கவும், வியாபார டீலிங்கை முடிக்கவும் இவர் உதவிகளை செய்து இருக்கிறார். இதன் மூலம் விகாஸ் துபே - அரசியல்வாதிகள் - போலீசார் என்ற பெரிய கேங் அவருக்கு பின் உருவாகி உள்ளது.
கட்சியில் சேர்ந்தார்
அதன்பின் 1996ல் விகாஸ் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். இவரின் தாதா குரு ஹரிகிஷன் ஸ்ரீவஸ்தவா பாஜகவில் இணைந்ததை அடுத்து, பகுஜன் சமாஜ் விகாஸை வளைத்து போட்டது. ஆனால பாஜகவில் இணைந்த ஹரிகிஷனுக்கு பாஜகவில் கட்சிக்கு உள்ளேயே சில எதிர்ப்புகள் இருந்தது. அதில் முக்கியமான எதிர்ப்பு பாஜக பிரமுகர் சந்தோஷ் சுக்லாவின் எதிர்ப்பு.
அரசியல் கொலை
தனது குரு ஹரிகிஷன் ஸ்ரீவஸ்தவாவிற்கு தொந்தரவு கொடுத்த சந்தோஷ் சுக்லாவை தீர்த்து கட்ட விகாஸ் முடிவு செய்தார். ஹரிகிஷன் ஸ்ரீவஸ்தவாவிற்காக பாஜகவின் முக்கிய தலைவர் சந்தோசை கொலை செய்தார். இதுதான் விகாஸின் நேரடியான அரசியல் கொலை ஆகும். தற்போதைய அமைச்சர் ராஜ்நாத் சிங்தான் அப்போது உத்தர பிரதேச முதல்வராக இருந்தார்.
திருப்பத்தை ஏற்படுத்திய கொலை
அதன்பின் 2000ம் ஆண்டு விகாஸ் துபே சித்தேஷ்வர் பாண்டே என்ற பேராசிரியரை சுட்டு கொன்றார். நில தகராறு ஒன்றில் சுட்டுக்கொன்றனர். பாண்டேவிற்கும் அரசியல் மற்றும் ஜாதி தொடர்புகள் இருந்தது. இதனால் அந்த கொலை பெரிதாக பேசப்பட்டது. இந்த கொலை வழக்கில் விகாஸ் குற்றவாளி என்று உறுதியான நிலையில், இப்போது வரை அவர் பெயிலில்தான் சுற்றி வந்தார்.
யோகி வருகை
இந்த நிலையில் கிட்டத்தட்ட 25 வருடமாக விகாஸ் உத்தர பிரதேசத்தில் தனியாக ஆவர்த்தனம் செய்து வந்தார். அப்போதுதான் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தார். யோகி வந்ததில் இருந்தே உத்தர பிரதேசத்தில் நாள் ஒன்றுக்கு 4 என்கவுண்டர்கள் நடந்தது. இவருக்கு ஏனோ தொடக்கத்தில் இருந்தே விகாஸை பிடிக்கவில்லை. தன்னுடைய தலையை காக்க விகாஸ் பாஜகவில் இணைய கூட தூது விட்டு இருக்கிறார்.
ஆனால இல்லை
ஆனால் விகாஸை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை, சரியாக சொல்ல வேண்டும் என்றாலே யோகி ஆதித்யநாத் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின்தான் விகாஸுக்கு எதிரான சந்தோஷ் சுக்லா கொலை வழக்கு தூசு தட்டப்பட்டு இருக்கிறது. விகாஸ் தலைக்கு 25 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு, 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு, பின் அது 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இவரை கைது செய்வதில் அல்லது என்கவுண்டர் செய்வதில் யோகி ஆதித்யநாத் தீவிரமாக இருந்தார் என்றும் கூறுகிறார்கள்.
போலீஸ் கொலை
இவரை கடந்த சில தினங்கள் முன் போலீசார் கைது செய்ய சென்ற போதுதான் போலீசார் மீது இவரின் கேங் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது.இதில்தான் 8 போலீசார் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பின் விகாஸை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட விகாஸ் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார்.