மொத்தமாக சிக்கும் கேங்.. தாதா விகாஸ் துபேயின் "ரைட் ஹேண்ட்" சுட்டுக்கொலை.. அதிகாலையில் பரபர டிவிஸ்ட்
லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த கேங்ஸ்டர் விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி மற்றும் வலது கை என்று கருதப்பட்ட அமர் துபே தற்போது என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தை உலுக்கிய போலீஸ் கொலை வழக்கில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை உத்தர பிரதேசத்தை சேர்ந்த முக்கிய கேங்ஸ்டர் விகாஸ் துபேவை கைது செய்ய போலீஸ் தனிப்படை சென்றது.
கான்பூரில் இருக்கும் சோபேபூர் போலீஸ் நிலையத்திற்கு அருகே இருக்கும் டிக்கூர் பகுதியில் துபே தங்கி இருப்பதாக தகவல் வந்தது. அவரை கைது செய்ய 20 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றார்கள்.
கொடூர துப்பாக்கி சூடு கொலை
இந்த நிலையில் போலீசார் விகாஸ் துபேயின் வீட்டை நெருங்கிய போது, அங்கு இருந்த துபேயின் கூட்டாளிகள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அங்கு துபேயின் ஆட்கள் 20க்கும் அதிகமானோர் இருந்தனர். போலீசார் மீது சரமாரியாக அடுத்தடுத்த துப்பாக்கியால் சுட்டனர். ஆட்டோமேட்டிக் துப்பாக்கி மூலம் போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
மரணம்
இதில் சோபேபூர் டிஎஸ்பி தொடங்கி வரிசையாக 8 போலீசார் பலியானார்கள். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. துபே மீது ஏற்கனவே 60 வழக்குகள் இருக்கிறது. பாஜக பிரமுகர் சந்தோஷ் சுக்லா கொலை வழக்கில் இவரை கைது செய்ய சென்ற போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விகாஸ் தூபேவிற்கு போலீஸ் அதிகாரி வினய் திவாரி என்பவர் கொடுத்து துப்பு மூலம்தான் விகாஸ் துபே இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்.
தப்பி ஓடினார்
போலீசார் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இடையே, விகாஸ் துபே எஸ்கேப் ஆகிவிட்டார். அவரின் வீடு தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இவரை பிடிக்க 40 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மொத்தம் 250 போலீசார் இவரை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
எங்கே இருக்கிறார்
அதோடு விகாஸ் துபே ஹரியானாவில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பரிதாபாத் இடத்தில் விகாஸ் துபே பதுங்கி உள்ளார். இது தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அங்கே ஒரு ஹோட்டலில் இவர் தங்கி இருக்கிறார். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் வெளியாகி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
கொலை
இந்த நிலையில் தற்போது விகாஸ் துபேவின் நெருங்கிய கூட்டாளி மற்றும் வலது கை என்று கருதப்பட்ட அமர் துபே தற்போது என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கிறார். இவரை போலீசார் கன்பூரில் வைத்து என்கவுண்டர் செய்து இருக்கிறார்கள். போலீசார் கொடுத்த உளவு தகவலின் அடிப்படையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது . விரைவில் இதனால் விகாஸ் துபேயின் மொத்த கேங்கும் பிடிபடும் என்று கூறுகிறார்கள்.