சப்பாத்தியுடன் உப்பையே ஏற்றுக் கொள்ளமுடியாது.. இதில் உ.பி. அரசு செய்த மற்றொரு வேலையை பாருங்க!
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மிர்சாபூரில் ஒரு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்த நிலையில் அந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வெள்ளை சாதத்துக்கு உப்பு பரிமாறப்பட்டதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மிர்சாபூரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு திட்டம் சரிவர வழங்குவதில்லை என்ற புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அந்த பள்ளியில் மதிய உணவு வேளையில் சப்பாத்தி பரிமாறப்பட்டது.
அதற்கு தொட்டுக் கொள்ள குருமா, சாம்பார், சட்டினி, பருப்பு ஆகியவற்றுக்கு பதில் வெறும் உப்பு வழங்கப்பட்டது. இதையும் அந்த ஏழை மாணவர்கள் வேறு வழியில்லாமல் சாப்பிட்ட அவலத்தை பத்திரிகையாளர் ஜெய்ஸ்வால் படம் பிடித்தார்.
வழக்கு பதிவு
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே பத்திரிகையாளர் ஜெய்ஷ்வால் மற்றும் ராஜ்குமார் பால் மீது அரசு வழக்கு பதிவு செய்தது.
உப்பு பரிமாற்றம்
இந்த நிலையில் அந்த பள்ளியில் சத்துணவில் சமையல்காரராக பணியாற்றும் ருக்மணி தேவி கூறுகையில் சப்பாத்தியுடன் உப்பு பரிமாறப்பட்டதற்கு முன் வாரம் சாதத்துக்கு தொட்டு கொள்ள சாம்பார், தயிர், ரசம், பருப்பு ஆகியவற்றுக்கு பதிலாக உப்பு பரிமாறப்பட்டது.
சாதம், உப்பு
உடனே பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சென்று உணவு பொருட்கள் இருப்பு இல்லை. அதனால் மாணவர்களுக்கு சாதமும் உப்பும் வழங்கப்பட்டது என கூறினேன். இது வெளியே தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்றேன்.
நம்ப மாட்டார்கள்
அதற்கு அவரோ சாதத்துக்கு உப்பு வழங்கினார்கள் என குழந்தைகள் கூறினாலும் அதை அவரது பெற்றோரோ மற்றவர்களோ நம்ப மாட்டார்கள் என கூறி என் வாயை அடைத்தார் என்றார்.