ஓடும் ரயிலில் அடுத்தடுத்து உயிரிழந்த 5 தமிழக முதியவர்கள்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் சோகம்!
ஓடும் ரயிலில் கோவையை சேர்ந்த 5 பேர் உயிரிழக்க என்ன காரணம் என தெரியவில்லை
லக்னோ: நாம பார்க்காத வெயிலா.. அனலா.. உத்திரபிரதேசத்தில் ரயிலில் போய்க் கொண்டிருந்த 5 பேர் வெப்பம் தாங்காமல் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுவும் நம்ம கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள் என்பதுதான் துயரத்தின் உச்சம்!
அக்னி நட்சத்திரத்தில் இருந்து நாம ஒருவழியா தப்பித்து விட்டாலும், கொஞ்ச நாளாகவே வட மாநிலங்களில் மண்டை பிளக்கும் வெயில் வாட்டி வருகிறது.
குறிப்பாக மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான், அரியானாவில் வெயில் கொளுத்தும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான், ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 பேர் டூர் சென்றிருக்கிறார்கள். இவர்கள் 5 பேருமே கோவையை சேர்ந்தவர்கள்.
அதிர்ச்சி.. உ.பி சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்!
உடம்பு சரியில்லை
இவர்களுக்கு ஓடும் ரயிலில் திடீரென உடம்பு சரியில்லாமல் போய் இருக்கிறது. உடனடியாக ஜான்சி ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். கடும் வெப்பத்தால் இவர்கள் மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
|
வயதானவர்கள்
இருந்தாலும் இவர்களின் மரணம் நிறைய சந்தேகத்தை எழுப்புகிறது. உயிரிழந்தவர்கள் எல்லாருமே வயசானவர்கள். பச்சைய்யா என்பவருக்கு வயசு 80, பாலகிருஷ்ண ராமசாமிக்கு 69, தனலட்சுமிக்கு 74, சுப்பராய்யா, தெய்வானைக்கு 71 வயது ஆகிறது.
வெப்பம்தான் காரணமா?
இவர்கள் சாதாரண பெட்டியில் பயணித்தபோது, வெப்பம் அதிகமாகி விட்டது என்கிறார்கள். அப்படியானால், இதே ரயிலில் மற்ற பயணிகளுக்கும் இதே வெப்பம்தானே பாதித்திருக்க வேண்டும்?
கோவை மக்கள்
அது மட்டுமில்லை.. கோவையில் இருந்து 68 பேர் கொண்ட குழுவினர் டூர் சென்றிருக்கிறார்கள். வாரணாசி, ஆக்ரா இப்படி நிறைய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வரும்போதுதான் பாதிப்பு வந்திருக்கிறது. வெப்பம் தாக்கம்தான் இவர்களுக்கு பாதிப்பு என்றால், ரயிலில் போகும்போதே அந்த பாதிப்பு இவர்களுக்கு வந்திருக்க வேண்டும். அல்லது புது சூழல், புது ஊர்.. அனல் தாங்க முடியவில்லை என்றாலும், உடன் சென்ற மற்ற கோவைவாசிகளுக்கும் இதே பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.
கேள்விகள்
இப்படி எதுவுமே இல்லாமல், ஓடற ரயிலில் 5 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதும், வெறும் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதும் பெரிய கேள்வியாக பிசைகிறது. இவர்களது சாப்பாட்டில் ஏதாவது பிரச்சினையா, அலைச்சலால் ஏற்பட்ட பாதிப்பா என்று பல கேள்விகள் எழுகின்றன.
பரிசோதனை
வெயிலுக்கு எத்தனையோ பேர் நம்ம ஊரிலும் சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார்கள் என்றாலும், இந்த மரணம் அதிர்ச்சியாக உள்ளது. எதனால் இவர்கள் உயிரிழந்தார்கள் என்பது பிரேத பரிசோதனை மூலம்தான் தெரிய வரும். அதுவரை இவர்களின் மரணத்திற்கான சரியான காரணம் தெரிய வாய்ப்பில்லை.