வாஜ்பாய்க்கு நெருக்கமானவர் லால்ஜி...ஒதுங்கி இருந்தவருக்கு பதவி கொடுத்த மோடி!!
லக்னோ: மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் லக்னோவில் இருக்கும் மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று லால்ஜி காலமானார். அவருக்கு வயது 85
தொடர்ந்து இவரது உடல்நலம் மோசமடைந்து வந்த நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இவரது கிட்னி, நுரையீரல், கல்லீரல் ஆகியவை பாதிப்படைந்தன. இன்று காலமானார். இந்த செய்தியை அவரது மகன் அசுதோஷ் டாண்டன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்...பிரதமர் இரங்கல்!!
லால்ஜி வாழ்க்கை வரலாறு:
லக்னோவில் பிறந்து வளர்ந்தவர் லால்ஜி. சிறுவயதிலேயே ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இந்த அமைப்புகளுடன் இவர் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளால் இவருக்கு அரசியல் வட்டாரத்திலும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன.
அமைச்சராக பதவியேற்பு
துவக்கத்தில் 1970 ஆம் ஆண்டுகளில் கார்பரேட்டராக தனது பணியை துவக்கினார். பின்னர் பத்தாண்டுகள் கழித்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேலவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் 1996-2009 வரை சட்டமன்றத்திற்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் 2003-07 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான மாயாவதியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர். மேலும் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார்.
வாஜ்பாய்க்கு நெருக்கமானவர்
மறைந்த பிரதமர் வாஜ்பாயுடன் இவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. 1991ஆம் ஆண்டில் லக்னோவில் வாஜ்பாய் போட்டியிட்டார். அப்போது அவரது வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். அவருக்கு தேர்தல் மேலாளராக பணியாற்றினார். தன்னையும் பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
லக்னோவில் போட்டி
சிறிது சிறிதாக உடல் நலம் பாதிக்கப்பட்ட வாஜ்பாய் லக்னோவில் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து லக்னோவில் 2009 ல் இருந்து பாஜக வேட்பாளராக லால்ஜி போட்டியிட்டார். 15வது நாடாளுமன்றத்திற்கு எம்.பி.யாக தேர்வானார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரிடா பகுகுணா ஜோஷியை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
லக்னோ தொகுதி கை மாறியது
இதையடுத்து 2014ல் லக்னோ தொகுதியை தற்போதை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இத்துடன் வாஜ்பாய் விசுவாசிகளுக்கு அரசியல் எதிர்காலம் முடிந்தது என்று பரவலாக அப்போது பேசப்பட்டது. கருத்துத் வேறுபாடுகள் எழுந்தன. பிரதமர் மோடி, அமித் ஷா சகாவில் வாஜ்பாய், அத்வானி விசுவாசிகளுக்கு இடம் இல்லை என்ற கருத்து எழுந்தது.
பீகார் ஆளுநர் பதவி
ஆனால், தன்னுடைய கோபத்தை எந்த வகையிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் லால்ஜி அமைதியாக இருந்தார். பீகார் ஆளுநர் பதவி 2018ஆம் ஆண்டில் அவரை தேடி வந்தது. இதையடுத்து, 2019ல் மத்தியப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
மனைவி, மகன்கள்
லக்னோவில் ஏப்ரல் 12ஆம் தேதி, 1935ல் பிறந்தார். இவரது மனைவி கிருஷ்ணா டாண்டன். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.