அப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முத்தலாக் கூறிய இளம்பெண் புகார் கூறியதால் அவரது குழந்தை கண் முன்னே கணவர் வீட்டார் தீயிட்டு கொளுத்திய சம்பவத்தில் குழந்தையிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஸ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் நபீஸ் (26). இவரது மனைவி சாயிஷா (20). இவர்களுக்கு 5 வயதில் பாத்திமா என்ற மகள் உள்ளார்.
நபீஸ் மும்பையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபீஸ், சாயிஷாவை போனில் தொடர்பு கொண்டு முத்தலாக் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாயிஷா, கடந்த 6-ஆம் தேதி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சாயிஷா
இந்த நிலையில் கணவர் வந்ததும் அவரிடம் விசாரிப்பதாக கூறி சாயிஷாவை போலீஸார் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். கடந்த 15-ஆம் தேதி ஊருக்கு வந்த நபீஸ், சாயிஷாவிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது நான்தான் முத்தலாக் கூறிவிட்டேனே, இனி ஏன் இங்கு இருக்கிறாய் என கேட்டுள்ளார்.
சாயிஷாவின் முடி
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது சாயிஷாவை நபீஸ் தாக்கியுள்ளார். இதையடுத்து சாயிஷாவின் அழுகுரல் கேட்டு நபீஸின் தந்தை, தாய், சகோதரிகள் ஆகியோர் வந்தனர். விஷயத்தை கேள்விப்பட்டதும் நபீஸின் சகோதரிகள் சாயிஷாவின் முடியை பிடித்து இழுத்துள்ளனர்.
சிறுமி
பின்னர் நபீஸ் , சாயிஷாவை இழுத்து தள்ளியுள்ளார். உடனே அவரது சகோதரிகள் மண்ணெண்ணெய்யை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ளனர். நபீஸின் தந்தையும் தாயும் தீவைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவங்களை 5 வயது சிறுமி பார்த்துவிட்டு அலறியுள்ளார். எனினும் நபீஸ் உள்ளிட்டோர் சாயிஷாவை காப்பாற்றவில்லை.
சிகிச்சை பலனின்றி
அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சாயிஷாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது 5 வயது சிறுமி, தாய்க்கு நடந்த கொடூரம் குறித்து அழுது கொண்டே வாக்குமூலம் அளித்தார்.
சிறுமி வாக்குமூலம்
முத்தலாக் கூறிய தந்தை மீது போலீஸில் புகார் அளித்ததால் தாய் உயிரோடு எரித்து கொன்றதையும் அதற்கு அத்தை, தாத்தா, பாட்டி உடந்தையாக இருந்ததையும் போலீஸாரிடம் தனது மழலையில் அந்த குழந்தை கூறியதை கேட்டு அங்கிருந்தோர் கண்கலங்கினர்.