கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. நிர்பயா சம்பவம் போல் பிறப்புறுப்பில் இரும்பு ராடு நுழைத்த கொடூரம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் படான் மாவட்டத்தில் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. மிகவும் கொடூரமான முறையில் இவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
படான் மாவட்டத்திலும் ஈரக்குலையே நடுங்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய நடுத்தர வயதுடைய பெண் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
காவல் நிலையம்
அந்த பெண்ணை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண் வீட்டார், உகைதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இரவு 12 மணிக்கு அந்த பெண்ணை காரில் ஒரு டிரைவர் உள்பட 3 பேர் அழைத்து வந்து கிராமத்தில் விட்டுவிட்டு தப்பியோடினர்.
பெண் மருத்துவர்
ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை பெண் மருத்துவர் உள்பட 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர்.
சித்ரவதை
அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் அந்த பெண் மிகவும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை நடந்த பிரேத பரிசோதனையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது பிறப்புறுப்பில் இரும்பு ராடை நுழைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது.
விலா எலும்புகள்
அந்த பெண்ணின் கால்கள் உடைக்கப்பட்டன. அவரது நுரையீரலும் மிகவும் கனமான பொருளை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. அவரது விலா எலும்புகளும் உடைக்கப்பட்டன. உடலிலிருந்து அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் மஹன்ட் பாபா சத்யநாராயணன், வேத்ராம், டிரைவர் ஜாஸ்பால் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
நிர்பயா கொடூரம்
இது போல் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி நுழைத்த சம்பவம் நிர்பயா சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயா மிக கொடூரமான முறையில் 5 பேர் கொண்ட மிருகங்களால் வேட்டையாடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.