பசுக் கொலையாளிகளை விடாதீங்க.. யோகி ஆதித்யநாத் தீவிரம்.. இன்ஸ்பெக்டர் கொலை குறித்து மெளனம்!
லக்னோ: உ.பியில் பசுக் காவலர்களால் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கோரமாக கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து தீவிர அக்கறை காட்டாமல், பசுக்களைக் கொன்றது யார் என்று தீவிர விசாரணை நடத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உ.பி. மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் பசுக்களின் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு கும்பல் போராட்டத்தில் இறங்கியது. காவல் நிலையத்தைக் குறி வைத்து நடந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.
போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை ஆகியவற்றை பிரயோகித்தனர். ஆனால் பலன் இல்லை. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் என்பவரை ஒரு கும்பல் கொடூரமாக சுட்டும், தாக்கியும் கொன்றது. இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இந்த கலவரத்தில் 5 போலீஸாரும் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பசுக்களைக் கொன்றவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேசமயம், சுபோத் குமார் சிங் கொலை தொடர்பாக அவர் எந்த உத்தரவையும் இட்டதாக தெரியவில்லை. இதனால் பசுக் காவலர்களைக் காக்கும் வகையில் முதல்வர் செயல்படுகிறாரா என்ற சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில், இன்று காலை இன்னொரு அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. அதில், இறந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்தினரை முதல்வர் சந்திப்பார் என்று கூறப்பட்டுள்ளது. முதல் தகவலால் ஏற்பட்ட சலசலப்பை சைலன்ட் ஆக்க இந்த 2வது அறிக்கை என்று பேச்சு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று காவல் ஆய்வளர் மற்றும் கலவரத்தில் இறந்த மற்றொருவர் தொடர்பாகவும் மற்றொன்று பசு கொலை தொடர்பானதுமாகும். கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படுபவர் பஜ்ரங் தளத்தைச் சார்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.