ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும்.. பூசாத மாதிரியும் இருக்கனும்.. யோகி ஆதித்யநாதின் புது வியூகம்
லக்னோ: நாடு முழுவதையும் ஆட்டி வைத்த மக்களவை தேர்தல் ஜுரத்திலிருந்து விடுப்பட்டுள்ள உத்தரப்பிரதேச மாநில அரசியல், தற்போது இடைத்தேர்தல் மற்றும் அம்மாநில சட்டமன்ற தேர்தல்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்காக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவா பிம்பத்தை மாற்ற பாஜக தேர்தல் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 2022-ம் ஆண்டு தான் சட்டமன்ற தேர்தல் என்றாலும், அம்மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தகளில் வென்று பாஜக தனது இமேஜை நிலைநிறுத்தி கொள்ள விரும்புகிறது. இதை சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவராக இருந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்த வரை மீண்டும் அவரே முதல்வராக வேண்டும் என பாஜக தலைமை நினைக்கிறது. யோகி ஆதித்யநாத் பாஜக-வின் இனவாத அரசியலின் முக்கிய உருவமாக காட்சியளிப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால் அவரால் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் மாநிலத்திற்கு கிடைத்துள்ளதாக பாஜக கூறியுள்ளது. எனவே மீண்டும் உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்கும் பட்சத்தில், ஏராளமான வளர்ச்சி திட்டங்களை அவர் முன்னெடுத்து செல்வார் என கருதுகிறது பாஜக தலைமை. எனவே அவர் மீது படிந்துள்ள இந்துத்துவா பிம்பத்தை மாற்றி, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து தலைமையின் அறிவுறுத்தலின்படி, தன் மீதும் தனது அரசு மீதான பிம்பத்தை மாற்றியமைக்க டெல்லியை சேர்ந்த மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளார் யோகி ஆதித்யநாத். குறிப்பிட்ட மக்கள் தொடர்பு நிறுவனமானது, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநில தேர்தல்களில் களப்பணியாற்றி, தற்போது ஆளும் அரசுகள் ஆட்சியமைக்க உதவி புரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"பாஜக ஒழிக".. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
ஆனால் தற்போது அந்த நிறுவனம் அரசின் தகவல்துறையோடு இணைக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வியூகம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. அதாவது யோகி ஆதித்யநாத்தின் இந்துத்துவா பிம்பத்தை முழுவதுமாக மாற்ற போவதில்லையாம்.
மாறாக அவர் மாநிலத்தில் இதுவரை மேற்கொண்ட வளர்ச்சி திட்டங்களை முன் வைத்து 80 சதவீதமும், எஞ்சிய 20 சதவீதம் இந்துத்துவா கொள்கைகளை முன்வைத்தும் பிரச்சார வியூகங்கள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தாத மாதிரியும் இருக்க வேண்டும். அதே சமயம் முழுமையாக அதை கைவிடவும் கூடாது என்பதே, ஆதித்யநாத்திற்காக அமைக்கப்பட உள்ள அசத்தல் வியூகமாம்.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான சந்திர மோகன், யோகி ஆத்தியநாத் அரசின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள், இடைத்தேர்தல்களின் போதும் சட்டமன்றத் தேர்தல்களிலும் முன்னிலைப்படுத்தப்படும். மேலும் சட்டம், ஒழுங்கு மற்றும் கல்வி போன்ற துறைகளில் அளித்த வாக்குறுதிகளை அவரின் அரசு எப்படி நிறைவேற்றியது என்பதையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றார்.
மக்களவை தேர்தலை போல மோடியை முன்னிறுத்தி மாநில தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்வீர்களா அல்லது யோகி ஆதித்யநாத்தை முன்னிலைப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு, அது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.