பாஜக கொடியை கூட எங்க பஸ்களில் பறக்கவிடுங்க..தொழிலாளர்களை ஊருக்கு போக விடுங்க... பிரியங்கா காந்தி
லக்னோ: தாங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் பாஜக கொடிகளை கூட பறக்கவிடுங்கள்- ஸ்டிக்கரையும் ஒட்டிக் கொள்ளுங்கள்.. ஆனால் இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கதான் வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா லாக்டவுனால் பிற மாநிலங்களில் சிக்கிய இடம்பெயர் தொழிலாளர்களின் துயரம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இதனால்தான் அனைத்து தரப்பினரும் இப்போதாவது இடம்பெயர் தொழிலாளர்களின் துயரம் குறித்து கதறுகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பிற மாநிலங்களில் தவிக்கும் உத்தரப்பிரதேச தொழிலாளர்களை அழைத்துவர 1,000 பேருந்துகளை இயக்கப் போகிறோம்; இதற்கு அனுமதி தர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி ஒரு கடிதம் கொடுத்திருந்தார். இதில் இருந்து அரசியல் விளையாட்டுகள் கிறுகிறுக்க வைத்துவிட்டன.
ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள்- நாளை முதல் முன்பதிவு தொடக்கம்- 200 ரயில்களின் கால அட்டவணை வெளியீடு
கிண்டலடித்த பாஜக
பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று பேருந்துகளை அனுமதிக்கிறோம்; ஆனால் பேருந்து விவரங்கள், ஓட்டுநர் விவரங்களை கொடுக்க வேண்டும் என்றது உ.பி. அரசு. இது தொடர்பான விவரங்களை காங்கிரஸ் அளித்ததை வைத்து கிண்டலடித்தது பாஜக. காங்கிரஸ் தந்த பட்டியலில் டூ வீலர்கள், ஆட்டோக்களின் எண்கள்தான் இருக்கிறது என விமர்சித்தனர்.
எங்களுக்கு அனுமதி தாருங்கள்
இந்த அரசியல் சித்துவிளையாட்டு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி வீடியோ மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், 1000 பேருந்துகளை நாங்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். அவற்றை பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்துங்கள். எங்களுக்கு அனுமதி கொடுங்கள்.
பாஜக கொடியை கூட...
நீங்கள் விரும்பினால் அந்த பேருந்துகளில் பாஜகவின் கொடியை கூட பறக்கவிடுங்கள். பாஜக அடையாளங்களையும் பேருந்துகளில் ஒட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதுதான். எங்களுக்கு இருக்கக் கூடிய பொறுப்புகளை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
தேசத்தின் முதுகெலும்புகள்
இடம்பெயர் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்த நாட்டில் வாழும் இந்தியர்கள் என்பது மட்டும் இல்லை. அதற்கும் மேலாக இந்த தேசத்தின் முதுகெலும்புகள். இந்த இடம்பெயர் தொழிலாளர்களின் வேர்வையிலும் ரத்தத்திலும்தான் இந்த தேசம் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாம் அனைவருக்குமான பொறுப்பு இருக்கிறது. அரசியல் செய்வதற்கு இது நேரம் அல்ல என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரியங்கா காந்தி.