அகிலேஷ் யாதவிற்கான இசட் பிளஸ் பாதுகாப்பு விரைவில் வாபஸ்.. உள்துறை அமைச்சகம் திடீர் முடிவு
லக்னோ: சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவிற்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தில் பாஜக 62 தொகுதிகளை வென்றது. ஆனால் மாயாவதி- அகிலேஷ் கூட்டணியால் 15 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு முதல் அகிலேஷ் யாதவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 22 பேர் அடங்கிய தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள், அதிநவீன ஆயுதங்களுடன் அகிலேஷ் யாதவுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஐபி-க்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொடர்பாக உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது விஐபி-க்களுக்கான அச்சுறுத்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது
அகிலேஷ் யாதவுக்கு பெரியளவில் அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பதால் அவருக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவரது தந்தையான முலாயம் சிங்கிற்கு வழங்கப்பட்டு வரும் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பை திரும்பப் பெற நடவடிக்கை ஏதும் எடுக்க போவதில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாஜக மாநிலங்களவை எம்.பி மாத்தூர், லக்னோ மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோற்ற ஆக்ரியா பிரமோத் , ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார், பாஜக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ், எட்டாவா பாஜக எம்.பி., ராம் ஷங்கர் கதேரியாவும் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.