என் சாவுக்கு காரணம் ரவி.. அவனுக்கு கண்டிப்பா தண்டனை தரணும்.. 10ம் வகுப்பு மாணவனின் பரிதாப தற்கொலை
மதுரை அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்
மதுரை: "என் சாவுக்கு காரணம் ரவி.. ரொம்ப கொடுமை செஞ்சான்.. ரத்த கண்ணீரை வரவழைச்ச அவனுக்கு தண்டனை வாங்கி தரணும்" என்று 10-ம் வகுப்பு மாணவன் லட்டர் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் தொட்டப்பாநாயக்கணூரை சேர்ந்த மாணவன் பாலாஜி... உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
வகுப்பின் கணக்கு வாத்தியார் ரவி டியூஷன் நடத்தி வருகிறார். 9ம் வகுப்பு படித்தபோது, பாலாஜி இங்குதான் டியூஷன் போயுள்ளான். இப்போது 10-ம் வகுப்புக்கு வேறு இடத்திற்கு டியூஷன் சென்றிருக்கிறான். இதுதான் பிரச்சனை!
பாலாஜியை தினமும் திட்டி தீர்த்து கொண்டே இருந்தார் ரவி.. வெறுப்பை அதிகமாக காட்டினார்.. காரணமே இல்லாமல் அடித்துள்ளார்.. இதை எல்லாவற்ரைறயும் பாலாஜி பெற்றோரிடமும் சொல்லி அழுதுள்ளான். அவர்களும் மகனை சமாதானப்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் டியூஷன் வாத்தியாரின் அட்டகாசம் 6 மாசமாக அதிகரித்து வந்துள்ளது. போன சனிக்கிழமையும் பாலாஜியை ரவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி, ஸ்கூல் விட்டதில் இருந்து யாருடனும் பேசாமல் இருந்துள்ளான். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பெற்றோர் வெளியே சென்ற நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தகவலறிந்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை ஆரம்பித்தனர். அப்போதுதான், நோட்டு புத்தகத்தில் ஒரு பக்கத்தில் காரணத்தை பாலாஜி எழுதி வைத்திருந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. 'என் சாவுக்கு காரணம் ரவி. என்னை ரொம்பவும் கொடுமை செய்தான். அவனுக்கு தண்டனை தர வேண்டும். முக்கியமாக என் ரத்த கண்ணீருக்கு காரணமான ரவிக்கு தண்டனை தர வேண்டும்.. நண்பனுக்கும், பெற்றோருக்கும் இறுதி வணக்கம்' என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
பாலாஜியின் தந்தை, போலீசில் இந்த கடிதத்தை ஒப்படைத்துள்ளார். இந்த கையெழுத்து பாலாஜியுடையதுதானா? என்பது உட்பட பல விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன. ஆனால் இப்போது ஆசிரியர் ரவியை காணோம் என்பதால் போலீசார் தேடி வருகிறார்கள்.